Friday, January 9, 2015

ஒரு அடையாள அட்டை படலம்!

மாலை அஞ்சு மணிக்கு வரச்சொன்னவள். இப்போது மணி நாலரை. நூறாம் நம்பர் பஸ். ரோட்டில் கொஞ்சம் டிராபிக் இருந்தது. இன்னும் நாலு பஸ் ஹோல்டை தாண்டினால் வெள்ளவத்தை வந்து விடும். ஒரே படபடப்பாக இருந்தது. ஆனால் அது ஒரு சந்தோசப்படபடப்பு. முதன்முறை அல்லவா, கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன். மனம் வேறு எங்கோ சஞ்சரிக்கிறது. நான் கொழும்புக்கு புதுசு. இறங்க வேண்டிய ஹோல்டை விட்டுவிடபோகிறேனோ என்ற எண்ணம் வந்தது. வெள்ளவத்தை "மார்க்கெட்" ஹோல்ட்டுக்கு வரசொல்லியிருந்தாள். வேறு ஏதாவது ஹோல்டில் மாறி இறங்கினாலும் யாரிடமாவது விசாரித்து போய் சரியான இடத்துக்கு போய் சேர்வதற்கு சிங்களம் தெரியாது. அடுத்தது தெகிவளை நகரசபை ஹோல்ட். பிறகு வெள்ளவத்தை ஆர்மி செக்பொய்ன்ட் வரும். சிலநேரம் மறித்து "ஐ.சி" கேட்பான்கள். அப்போதுதான் மனதிற்குள் மின்னலடித்தது. பேர்சை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். பேர்சை காணவில்லை. அவள் "வா சந்திப்போம்" என்று அழைத்ததால் ஏதோ அவசரத்தில் பேர்சையும் எடுக்காமல் வந்து விட்டதை எண்ணியபோது நெஞ்சில் பகீரென்றது. செக்பொய்ண்டில் செக் பண்ணும்போது "ஐ.சி", போலீஸ் ரிப்போர்ட் இல்லாவிட்டால் முடிந்தது கதை. சந்தேக கேசில் கம்பி எண்ண வேண்டியதுதான். எல்லா பஸ்சையும் செக் பண்ணமாட்டார்கள். ஏதாவது ஒரு பஸ்சை ராண்டமாக நிறுத்தி செக் பண்ணுவார்கள். இந்த பஸ்சை நிறுத்தினால் என் கதை அம்போதான். "ஐ.சி" இல்லாவிட்டால் முதல் குற்றம், சிங்களம் பேசி சமாளிக்க முடியாவிட்டால் இரண்டாம் குற்றம். இவை எல்லாவற்றையும்விட திரு.. திருவென்று.. முழித்தால் மூன்றாம் குற்றம். எனக்கு எதிராக உடனடியாக சுமத்துவதற்கு ஏதுவாக மூன்று குற்றங்கள் இப்போது இருக்கின்றன. உடனடியாக ஜெயில்தான். யாருக்காவது தகவல் சொல்லி மீட்டுச்செல்ல ஒரு கிழமையாகும். ஆனாலும் அதிஷ்டம் இருந்தால் தப்பலாம். இப்போதுதான் முதல்முறையா ஒரு பொண்ணு "கபேக்கு வா..  உன்னோடு எதிர்காலம் பற்றி முக்கியமாக கதைக்கணும்" என்று சொல்லியிருக்கா. லவ் சரியாகும் போல இருக்கும் நேரத்தில் இப்படி முட்டாள்தனமாக "ஐ.சியை" விட்டுவிட்டு வந்திருக்கிறேனே என்று என்னை நானே சபித்துக்கொண்டேன். தலையை சுற்றியது. பஸ்ஸிலிருந்து இறங்கி மீண்டும் வீட்டுக்கே போனால் அந்த "ரிஸ்க்" இருக்காது. ஆனால் என் லவ் முளையிலேயே கருகி விடும்.

***********************************

அது ஒரு காலம். காசைவிட உயிர் மதிப்பு மிகுந்த காலம். நீங்கள் இந்த திருநாட்டின் உருப்படியான பிரஜைகள் என்று நிரூபிக்கும் முதல் ஆதாரம் நீங்கள் வைத்திருக்கும் "ஐ.சி" எனப்படும் "ஐடேன்டிடி கார்ட்". தமிழில் சொல்வதானால் அடையாள அட்டை. "ஐ.சி" எனப்படும் அந்த வஸ்து குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி, மற்றும் சோகமாக போஸ் கொடுக்கும் மூஞ்சியையுடைய போட்டோ போன்ற விபரங்கள் அடங்கிய அட்டை. இந்த அட்டை இல்லாதவர்கள் பதினாறு வயதுக்கு குறைவானவர்களாக இருக்கலாம் அல்லது இந்நாட்டின் பிரஜைகளாக இல்லாதிருக்கலாம், இவை எதுவும் இல்லாவிட்டால் நீங்கள் சந்தேக நபராகவும் இருக்கலாம். கொழும்பில் இருக்கும் நபர்களுக்கு "ஐ.சி" என்பது உடலின் இன்னொரு அங்கம் போன்றது. அது இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவது நீங்களாகவே ஆறடிக்கு ஆறடி அறை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போய் பாணும், பருப்பும் மட்டுமே சாப்பிட்டு மிச்ச காலத்தை கழிப்பது போன்றது. வீட்டிலிருந்து கிளம்பும்போது அம்மா "பத்திரமா பார்த்து போடா" என்று சொல்லுவதற்கு பதிலாக "ஐ.சியை கொண்டு போடா" என்றுதான் சொல்லுவா. "ஐ.சி"யை தொலைப்பது போன்று வரும் கனவுதான் அக்காலத்தின் படுமோசமான கனவு.

கொழும்பு என்பது ஒரு கனவு தேசம். ரோடு நிறைய கடைகள். எதுவும் கிடைக்கும். ஏ.ல். எக்ஸாமில் சொதப்பினாலும் ஏதாவது படிக்கலாம். எந்த கொம்பனும் வெளிநாட்டுக்கு  போவதற்கு விசா எடுக்க இங்குதான் வந்தாகணும். ஆனாலும் கொழும்பு கெடுபிடிகள் நிறைந்த தேசம். ஆங்காங்கே செக்பாயிண்டுகள் இருக்கும். அடிக்கடி வீதிகள் மூடப்பட்டு வழவழப்பான கார்கள் அணிவகுத்து செல்லும். சரியான காரணம் இல்லாமல் கண்ட இடங்களில் உலாத்தினால், ஒருமுறை மாமியார் வீட்டுக்கு போய் வரவேண்டும். இவ்வாறான சூழ்நிலை காரணமாக, சும்மா காரணமில்லாமல் ஊர் சுற்ற யோசிப்போம். ஆகவே கொழும்பு ஒரு சொர்க்கமா? நரகமா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். இப்படியான ஒரு நகரத்தில் "ஐ.சி"யை தொலைத்தால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. நானும் ஒருமுறை தொலைத்திருக்கிறேன்.

நான் "ஐ.சி"யை தொலைத்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று காலை எழும்பும்போதே மணி எட்டு. மேகங்களால் மூடப்பட்ட மந்தமான காலை. அன்று காலை வழமைக்கு மாறாக, வழமையான குயில்கள் கத்தும் ஓசைக்கு பதிலாக அண்டங்காக்கைகள் கரைந்ததாக ஞாபகம். இன்று ஏதோ விபரீதமாக நடக்கபோகிறது என்று என் மனம் சொன்னது. ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை. அவசரமாக ஷேவ் செய்துகொண்டு ஓடிப்போய் பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் அதிகமில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கும்போது கொஞ்சம் கூட்டமாக இருந்ததாக ஞாபகம். இறங்கினேன். தாகமாக இருந்தது. கொஞ்ச தூரத்தில் ஒருத்தன் இளநீர் விற்றுக்கொண்டிருந்தான். ஒரு இளநீர் குடித்தேன். பத்து ரூபா என்றான். பேர்சை எடுக்க துழாவினேன். ம்ஹூம்.. அது இல்லை.. கடைசியாக பஸ்ஸுக்கு காசு எடுத்து கொடுத்ததாக ஞாபகம். எங்கு தேடியும் இருக்கவில்லை.. அவ்வளவுதான்.. கதை முடிந்துவிட்டது.. பேர்சை எவனோ பிக்பொக்கட் எடுத்துவிட்டான். அதில் முப்பது ரூபாய்தான் இருந்தது. அது இப்போது முக்கியமில்லை. என்னுடைய "ஐ.சி" அதில்தான் இருந்தது. தலை சுற்றியது. இளநீர்க்காரன் கையில் நல்ல கூரான அரிவாள் இருந்தது. அவன் வெட்டிய இளநீருக்கு காசு கொடுக்கணும். அதுவேறு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பேர்ஸ் தொலைந்து போனதை இளநீர்க்காரனுக்கு சைகை விளக்கம் கொடுக்க முயற்சித்தேன். அவனும் கத்தியை ஆட்டிக்கொண்டு ஏதோ புரியாத சிங்களத்தில் கேட்டான். கடைசியாக எனது கையிலிருந்த புதிய "நோக்கியா 3310" போனை கொடுத்து "நாளைக்கு காசை தாரேன், அதுவரை போனை வச்சிருங்க" என்றேன்.  "என்ன தம்பி உங்களுக்கு பேச்சு வருமா? நீங்க ஊமைன்னு நெனைச்சேன்.. பத்து ரூபாக்கு போயி போனை தாறீங்க.. நாளைக்கு காசை தாங்க" என்றான். அவனும் தமிழன்தான். நான் வேறு முட்டாள்தனமா சைகை செய்து.. சை.. "ஐ.சி" வேறு தொலைந்து போய்.. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு செக் பொய்ண்டில் மாட்டினால் கதை கந்தல். வீட்டுக்கு போன் செய்வதற்கு போனில் காசு இல்லை.

இந்த சம்பவம் நடைபெற்ற நேரம் காலை பத்தரை மணி. இடம் கல்கிசை மார்கெட் அருகில். திருவென்று திருவென்று முழித்து கொண்டிருக்கிறேன். அப்போது பார்த்து யாரோ முதுகில் தட்டினார்கள். இதய துடிப்பு சடாரென்று அதிகரிக்க திரும்பினேன். அது கண்ணன். நண்பன்..

"டேய் என்னடா ரோட்டில முழுசிக்கொண்டு நிக்கிற.. சைட் அடிக்க வந்தியா" என்று சிரித்தான்.

"ஐ.சி தொலைஞ்சு போச்சுடா. யாரோ பஸ்சில பிக்பொக்கட் அடிச்சு போட்டாங்கள்" என்று அழாக்குறையாக சொன்னேன்.

"இதுக்கு போய் அழுகிற.. வாடா போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்போம்"

"இல்லடா பயமா இருக்கு.. அங்க போனா என்னை பிடிச்சு ஜெயிலில போடுவாங்கள்"

"சும்மா வாடா.. கம்ப்ளைன்ட் கொடுக்கத்தானே போறோம். அது இல்லாம புது ஐ.சிக்கு அப்ளை பண்ண ஏலாது"

அதுநாள் வரை கல்கிசை போலிஸ் ஸ்டேஷன் எங்கேயிருக்கிறது என்று தெரிந்திருக்காத என்னை கண்ணன் அழைத்துச்சென்றான். போலிஸ் ஸ்டேஷன் நான் நினைத்ததை போலல்லாது விநோதமாக அமைதியாக இருந்தது. ஆனாலும் எனது காலில் நடுக்கம் குறையவில்லை. போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்காக வரிசையில் காத்திருந்தோம். அப்போது பார்த்து கண்ணன் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை கேட்டான்

"டேய்! எல்லா இடமும் சரியா தேடி பார்த்திட்டியா? முதுகில இருக்கிற BAGஇல தேடி பார்த்திட்டியோ" என்று சும்மா சாதாரணமாகத்தான் கேட்டான்.

ஒரு துளி நம்பிக்கையுடன் BAGஇல் தேடினேன். முதலில் கிடைக்கவில்லை. எல்லா இடமும் தேடினேன். A/L டியூசன் கார்டை வைக்கும் வழமையான இடத்தில் "ஐ.சி" வெளிப்பட்டது. எனது கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. இதற்கு முதல் நாள்தான் "ஐ.சியை" போட்டோகொப்பி எடுத்துவிட்டு எனது பேர்சில் வைப்பதற்கு பதிலாக BAGஇல் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. கண்ணனின் முகத்தை பார்த்து சிரிக்க முயன்றேன். அவன் என்னை கொன்றுவிடுவது போல பார்த்தான். "வாடா போவோம்" என்று மெதுவாக காதில் சொல்லி விட்டு விருக்கென்று வெளியேறி விட்டான். ஐ.சி கிடைத்த சந்தோசத்தில் வெளியே வந்தேன்.

கண்ணன் வேகமாக நடந்து போய் கொண்டிருந்தான்.

************************************************************!!!


இந்த கதையெல்லாம் நடந்தது, கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில். ஆனால் இன்று ஐ.சி என்ற வஸ்துவின் மரியாதை கிட்டத்தட்ட பூஜ்யம். நேற்று காலை ஒரு இலங்கையின் குடிமகனுக்குரிய கடமையை ஆற்றவேண்டிய ஒரே காரணத்துக்காக ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க வாக்களிப்பு நிலையத்துக்கு சென்றேன். அங்கிருந்த அதிகாரியிடம் வாக்களிப்பு அட்டையை ஸ்டைலாக கொடுத்தேன். "உங்கட அடையாளத்தை நிரூபிக்க ஐ.சி இருக்கா" என்றார். எனது வாழ்வில் மறுபடியும் ஐ.சி முக்கியத்துவம் பெறக்கூடிய தருணம். இருக்குமோ.... இல்லையோ... என்ற சந்தேகத்துடன் பேர்சை துழாவினேன். பேர்சின் ஒரு ரகசிய உள் பொக்கட்டில் காமாசோமாவேன்று ஐ.சி பரிதாபமாக எட்டிப்பார்த்தது.

4 comments:

  1. //வீட்டிலிருந்து கிளம்பும்போது அம்மா "பத்திரமா பார்த்து போடா" என்று சொல்லுவதற்கு பதிலாக "ஐ.சியை கொண்டு போடா" என்றுதான் சொல்லுவா. //
    100% true நண்பரே...
    நண்பரே கொழும்பில் பழைய புத்தகங்கள் வாங்கும் கடை ஏதும் இருந்தால் தெரியப்படுத்தவும்...

    ReplyDelete
  2. அப்படியே time இருந்தால் என்னுடைய blogற்கும் ஒரு விசிட் அடுக்கவும்...
    kavinthjeev.blogspot.com

    ReplyDelete
  3. உங்கள் கருத்துக்கு நன்றி கவிந்த்.. கொழும்பில் வெள்ளவத்தை Rolex hotelக்கு பக்கத்தில் சேனநாயக்க bookshopஇல் எப்போதாவது காமிக்ஸ் கிடைக்கும்.. அது உங்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.. இல்லாவிட்டால் மரதானையில் darley road முடியும் இடத்தில் சில கடைகள் இருக்கின்றன.. ஆனால் தமிழ் காமிக்ஸ் கிடைப்பது கொஞ்சம் அரிதுதான்

    ReplyDelete