Friday, May 22, 2020

ஒரு பட்டப்பெயர் படலம் !!

அரைநித்திரையில் ஆபீஸ் போய் சேர்ந்தேன். மணி அதிகாலை பத்தரை மணியிருக்கும். லிப்ட்டில் ஒருவரும் இருக்கவில்லை. ஒரு ஓரத்தில் சாய்ந்து கிடைத்த முப்பது செகண்டில் கண் அயர்ந்தேன். கன நேரமாக கதவு லிப்ட்டிலேயே போவது போன்றதொரு வினோத உணர்வாகவே இருந்தது. அந்த சில வினாடிகளுக்குள் கனவு ஓடியது. லிப்ட் திறந்தபோது வெளியே செல்வதற்காக பரபரத்தேன். ஷைலா உள்ளே வந்தாள். "நிக்கிற லிப்ட் ல என்ன செய்யிற" என்று ஆங்கிலத்தில் புன்முறுவலுடன் கேட்டாள். லிப்ட்டில் அவசர அவசரமாக ஏறிவிட்டு 30 செகண்ட் நித்திரைக்காக, போகவேண்டிய "ப்லோர்" எண்னை அழுத்தாமல் போய்விட்ட மடமையை எண்ணி வருந்தினேன். லிப்ட் அப்படியே நின்று கொண்டிந்திருக்கிறது. "என்ன உங்கட ப்ரொஜெக்ட்டில வேலை அதிகமோ. இப்படி தூங்கி வழியுறீங்க" என்று கேட்டபோது ஐந்தாம் மாடி வந்திருந்தது.

ஆபீஸ்சுக்கு நுழையும்போதே இதய துடிப்பு அதிகரித்தது. ப்ராஜெக்ட் மேனேஜர் "சமிந்த" புன்னகையுடன் அப்பாவியான நாலு Developer களுடன்  கதைத்து கொண்டிருந்தான். அவனை "சிரிக்கும் கொலைகாரன்" என்று சொல்வோம். மற்ற நேரங்களில் "உர்ர்" என்ற முகத்துடன் சீரியஸாக சுற்றி திரியும் அவன்  எங்களுக்கு வரும் ப்ராஜெக்ட் பிளானில் இல்லாத "திடீர்" வேலைகள் வந்தால் புன்னகையுடன் வந்து கதைத்து வேலையை தலையில் கட்டி விடுவான். அவன் தரும் வேலைகள் சில ஆபீஸ் முடியும் நேரத்தை கடந்து அடுத்த நாள் கதவை தட்டி விடும். அவனது இந்த புன்னகை திறமையால் சிலபல ப்ராஜெக்ட்கள் deadline க்கு முன்னராக முடிக்கப்பட்டன.

சோர்வாக உட்கார்ந்து ஈமெயில்களை நோட்டம் போட்டேன். தலையிடியான மூன்று ஈமெயில்கள் தவிர, உருப்படியாக ஒன்றுமே இருக்கவில்லை.  வேலைகளை உடனயாக முடித்து விடுமாறு அந்த  ஈமெயில்கள் எச்சரிக்கை செய்தன. அந்த ஈமெயில்களை பார்த்ததும் நித்திரை முழுவதுமாக கலைந்து தலைக்குள் இரைச்சல் ஏற்பட்டது. முந்தா நாள் யாழ்ப்பாண பஸ்ஸில் கேட்ட இரைச்சலான அனிருத்தின் பாட்டு வேறு மண்டைக்குள் ஓடியது. கலவரப்படும் மனதை சாந்தி செய்ய தாகசாந்தி செய்து கொள்ள முடிவெடுத்து லஞ்ச் ரூமுக்கு நடையை காட்டினேன். எங்கள் ஆபீஸில் எங்களுக்கான டீயை நாங்களே போட்டுக்கொள்ளவேண்டும். நாங்களும் டீ போடுகிறோம் பேர்வழி என்று தத்துபித்தென்று ஏதோ கலந்து குடிப்போம். அங்கே "செழியன்" டீ போன்ற ஒரு திரவத்தை உருவாக்கும் முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். பாதி கப் நிறைய பால்மா போட்டு கொஞ்சமாக சாயத்தை ஊற்றி அவன் உருவாக்கும் வெளிர்மஞ்சள் நிற திரவத்தை "ஸ்பெஷல் டீ" என்று செல்லமாக பெயர் வைப்பான். "டேய் மச்சான்! என்னடா வேலைக்கு வந்திட்டியா? மணி பத்தை தாண்டியிருக்குமே" என்று சத்தமாக கத்தினான்.

எங்கள் செக்சனில் நானும் செழியனும் மட்டுமே தமிழ், மற்றைய எல்லோரும் சிங்களவர்கள். ஆகவே நானும் அவனும் மட்டுமே தமிழில் கதைப்போம். எனக்கு சிங்களம் பஸ் கண்டக்டரிடம் காசு கொடுத்து மிச்ச காசு வேண்டுமளவுக்கு மட்டுமே தெரியும். ஆகவே மற்றவர்களுடன் இங்கிலீஷில் வெட்டி வெட்டி கதைப்பேன். நானும் செழியனும் வேலை இடத்திலேயே தமிழில் இஷ்டத்துக்கு கதைப்போம்.  எங்களை கொடுமைப்படுத்தும் ப்ராஜெக்ட் மேனேஜர்களை கேவலமாக கதைப்பதில் இன்பம் கண்டோம். அதில் முக்கால்வாசி கற்பனைதான். இப்படித்தான் ஒருமுறை சமிந்த பற்றி கேவலமாக கதைத்து எங்கள் மன வெறியை தீர்த்துக்கொண்டோம். செழியனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கவுசல்யா லியனகேவுக்கு கொஞ்சம் தமிழ் புரியும் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுவயதுகளில் யாழ்ப்பாணத்தில் அவள் சிலகாலம் வசித்தது எங்களுக்கு வினையாக வந்துதொலைத்தது. ஆனால் அவள் மருந்துக்கு கூட தமிழ் தெரியும் என்று சொல்லியிருக்கவில்லை. அவள் போய் சமிந்தவிடம் ஏதோ சொல்லிவைக்க எங்கள் தலைகள் உருட்டப்பட்டன. அவளுக்கு தெரிந்த சில  தமிழ் சொற்கள் மற்றும் பூதக்கண்ணாடி உதவியுடன் நாங்கள் பொழுதுபோக்காக பேசிய விஷயத்தை பெரியதாக சமிந்தவிடம் சொல்லியிருந்தாள். அவனிடம் ஏதோ சொல்லித்தப்பித்ததில் இதயம் தொண்டை வரை வந்திருந்தது. ஆனாலும் பலபேருக்கு எங்களை பற்றி தெரிந்து விட்டிருந்தது பெரிய அவமானமாக இருந்தது. யார் சிரித்தாலும் எங்களை பார்த்து சிரிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இந்த விஷயம் நடந்து 2-3 வாரமாக நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் உரையாடல்களை மற்றவர்கள் உளவு பார்க்காமல் இருக்க நவீன பொறிமுறைகள் தேவைப்பட்டன. அதனை நடைமுறைப்படுத்த நிறைய சிந்திக்க வேண்டியிருந்தது. செழியன் "modern problems need modern solutions" என்ற சித்தாந்தத்தை தீவிரமாக follow செய்யும் ஆசாமி. இந்த பிரச்னைக்கு புது code-word சிஸ்டம் கண்டுபிடிக்கவேணும் என்றான். அவன் யோசனைப்படி, மற்றவர்களின் பெயர்களை நேரடியாக உபயோகிப்பதை தவிர்த்தோம். ஆகவே ஆபீஸில் இருக்கும் எல்லோருக்கும் பட்டப்பெயர்கள் வைத்தோம். தொடக்கமாக எங்களை சிரித்துக்கொண்டே வேலை வாங்கும் சமிந்தவுக்கு "சிரிக்கும் கொலைகாரன்" என்ற காரணப்பெயரை சூட்டினேன். ஆபீஸ்ஸுக்காக உயிரை கொடுத்து வேலை செய்யும்  எங்கள் மேலதிகாரியான நிவாஸ்ஸுக்கு "சாமியார்" என்று பட்டம் சூட்டினோம். நிவாஸ் தனது வாழ்க்கையே கம்பெனிக்காக அர்ப்பணித்திருந்தார். நிவாஸ் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான code-wordம் ஒரு சாமியாரின் வழமையான செயற்பாடுகளை போன்றதாக இருக்கும். உதாரணமாக நிவாஸ் ஏற்பாடு செய்யும் மீட்டிங்குகளை "பிரசங்கம்" என்றழைத்தோம். நிவாஸ் எங்களுக்கு அடிக்கடி வாங்கித்தரும் treatகளை "பிரசாதம்" என்போம். அவர் கணக்கில்லாமல் செய்யும் அட்வைஸ்களை "உபதேசங்கள்" என்போம். சில பேர்களுக்கு பெயர் வைக்க நிறைய creativity தேவைப்பட்டது. creativity செழியனின் இரத்தத்திலே ஊறி இருந்தது. உதாரணமாக  எப்போதும் எங்களுக்கு வேலையை தந்து விட்டு ஆபிஸை சுற்றி ரவுண்ட் வரும் அதிரிபுதிரி ப்ராஜெக்ட் மேனேஜர் அனுராதாவுக்கு "சில்லு கட்டி சுத்தற பொண்ணு" என்று பெயர் சூட்டினான்.

இப்படியாக ஜாலியாக எங்கள் அரட்டையை எங்கள் காரணப்பெயர்கள் மூலம் தொடர்ந்தோம். ஆனாலும் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போது சில சிக்கல்கள் உருவாகின. ஒருமுறை செழியன் "அந்த ராக்கோழிப்பய resignation letter கொடுத்திட்டான்" என்றான்.  அப்போது கவுசல்யாவின் புருவங்கள் உயர்ந்ததை அவதானித்தேன். ஆஃபிஸில் உள்ள யாரோ ஒருவர் resign செய்யப்போவதை பற்றி கதைக்கிறோம் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். இது நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் எனது மேனேஜர் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு விஷயத்தில் கண்டித்தார்.

இந்த விஷயம் நடந்த பின்னர் செழியன் முழுமையான code-word மூலமாக மட்டுமே கதைப்பான். resignation letter கொடுப்பதை "காதல் கடிதம் கொடுப்பது" என்று மாற்றியிருந்தோம். எனக்கே அவன் சிலசமயங்களில் என்ன கதைக்கிறான் என்பதை மனதில் decode செய்வதற்கே சில வினாடிகள் செலவாகின. இப்படியாக எங்களின் அலப்பறைகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சென்றன.

திடீரென்று ஒருநாள் கௌசல்யாவின் இடம் மாற்றப்பட்டிருந்தது. ஆகவே செழியனுக்கு பக்கத்தில் உள்ள cubicle இல் புதிதாக ஒரு பெண் வந்திருந்தாள். பொட்டு போட்டிருக்கவில்லை.  வழமையான தமிழ் பெண்கள் போலல்லாது Modern dress இல் வந்திருந்தாள். "இவா சிங்கள பொண்ணுதாண்டா மச்சான். "  என்றான். நாங்களும் இஷ்டத்துக்கு code-wordஇல் கச்சேரி செய்தோம். இது நடந்து சில நாட்கள் கழிந்தபின்னர் நாள் காலை ஒரு அதிர்ச்சி செய்தியோடு செழியன் LunchRoom க்கு ஓடி வந்தான். "டேய் எனக்கு பக்கத்தில இருக்கிற பொண்ணு தமிழ் பொண்ணு போலிருக்கு. அநேக ஆக்கள் இவளோட இங்கிலிஷ்ல தான் கதைக்கினம். நீ சும்மா அவளோட பேச்சு குடுத்துப்பாரு" என்றான். செழியனுக்கு பெண்கள் என்றாலே வியர்த்து ஊத்தும், கை நடுக்கமெடுக்கும். ஆனால் எனக்கு கால் நடுக்கமெடுக்கும் அவ்வளவுதான். இதனால் அடுத்த செக்சனில் வேலை செய்யும் பச்சை தமிழனான "நிலூஷனை" கேட்பதாக முடிவெடுத்தோம்.

நிலூஷன் பெண்களோடு சர்வசாதாரணமாக கதைப்பான். பொக்கட் நாய் மாதிரி புஸ்புஸ் என்று தலைமுடி வளர்த்திருப்பான். மாதம் இருமுறை சலூன் ஏறி இறங்குவான். சலூன் போகும் முன்னர் இருக்கும் முடிகளின் அளவுக்கும் பின்னரான அளவுக்கும் பெரிய மாற்றமிருக்காது. அவனுக்கு சடையனார் சுவாமிகள் என்று பட்டப்பெயர் வைத்திருந்தோம். அவனை அணுகி இந்த பெண்ணை பற்றி கேட்டோம். "டேய் அது தமிழ் பொண்ணுடா நான் நேற்றே கதைச்சேன். உங்க ரெண்டு பேரை பத்தியும் கேவலமா சொன்னா. மத்தவங்களை பத்தி code-word ல எப்ப பார்த்தாலும் கதைக்கிறீர்களாம். அவா பெரிய Hacker ஆம். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உங்கட code-word எல்லாத்தையும் decode பண்ணிடுவாளாம்" என்று பயங்கரமாக சிரித்தான். எங்களுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.

எங்கட மேனேஜர் சமிந்ததான் நாங்கள் இருவரும் பேசுவதை ஒட்டுக்கேட்பதற்காக எங்களுக்கு பக்கத்தில் ஒரு பெண் உளவாளியான தமிழ் பெண்ணை வருமாறு செய்திருப்பதாக செழியன் தீர்க்கமாக நம்பினான். எனக்கும் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. அந்த பொண்ணு தமிழ்தானா என்பதில் பெரிய சந்தேகமிருந்தது. நிறைய மேக்கப் போட்டு சுத்தும் தமிழ் பொண்ணுகளுக்கு மத்தியில் மூணு நாளா முகம் கழுவாத மாதிரி இருந்த இந்த பெண்ணை தமிழ் பெண் என்று என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. ஆனாலும் சரியாக தெரியவில்லை. அதன்பிறகு நானும் செழியனும் அவதானமாக இருப்போம். அந்த பொண்ணு lunch break க்கு போனபிறகு மாத்திரமே எங்கள் சம்பாஷணையை வைத்துக்கொண்டோம். இப்படியாக ஒரு மாதம் போனது.

சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணே நீண்டகாலமாக இழுத்துக்கொண்டிருந்த எங்கள் project க்கு வந்தாள். ஒருநாள் project விஷயமா ஏதோ கேட்க வந்தாள். முடிஞ்சு போகும் முன்னர் "அண்ணா! நீங்களும் செழியன் அண்ணாவும் ஜாலியா கதைக்கிறதை கேட்க நல்லாருக்கும். இப்பவெல்லாம் அவரோட கதைக்கிறது குறைவா இருக்கே. அதுசரி நீங்க எனக்கு என்ன பட்டப்பெயர் வச்சிருக்கிறீங்க" என்று கேட்டாள்.


செழியன் சொன்னது சரிதான் அவள் நிச்சயம் லேடி ஜேம்ஸ் பாண்ட் தான்.

பின்குறிப்பு : இம்மாதிரியான சம்பவம் உங்களுக்கே நடந்த மாதிரி இருந்தாலோ நீங்கள் பார்த்தமாதிரியாக இருந்தாலோ குழம்ப வேண்டாம். quarantine சமயத்தில் இவ்வாறான எண்ண கோளாறுகள் ஏற்படுவது சகஜம்தான் :). இது 100% கற்பனை என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.









No comments:

Post a Comment