Showing posts with label காமிக்ஸ். Show all posts
Showing posts with label காமிக்ஸ். Show all posts

Tuesday, November 20, 2018

வாசிப்பு என்னும் மிருகம்

 சமீப நாட்களில் வாசிப்புக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறேன். இவ்வாறாக நேரம் ஒதுக்குவதற்கே மிகவும் சிரமமாக இருக்கின்றது. இதனாலேயே ரயிலில் பயணம் செய்யும்போதும் தீவிரமாக வாசிக்கிறேன். ரயிலுக்குள் நுழையும் கடல் காற்றை ரசிக்காமல் புத்தகத்துக்குள்ளே விழுந்திருக்கின்றேன். ஒரு பக்க யன்னலால் நுழையும் கடற்காற்று என்னை மயக்க தீவிர முயற்சி செய்து தோற்றுவிட்டு அடுத்தப்பக்க யன்னல் மூலம் தோல்வியுடன் வெளியேறுகிறது. இதற்குமுன்னர் நான் ஒருபோதும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால் மட்டுமே வாசிப்பேன். இப்போதெல்லாம் வாசிப்பு ஒரு குரங்கு போல என்னுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கும்படி என்னை அது ஏவுகிறது. என் சொல்பேச்சை அது கேட்பதில்லை. அது பேச்சை தட்டுவது கடினமாக இருக்கிறது. இரவு படுக்கைக்கு செல்ல முன்னர் வாசிக்காமல் படுத்தால் அந்த நாளில் ஏதோ குறையிருப்பதாக மனதுக்கு படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் எனது வாசிப்பு ரசனை எனக்கே பயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு எல்லோருக்கும் பொதுவாக பிடித்த புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று தோன்றாது. எப்போதோ கேள்விப்படட  பழைய கிளாசிக் புத்தகங்களை வாசிக்க வேண்டும் போல திடீரென்று தோன்றும். பழைய ஆங்கிலபடங்களின் மூலமான புத்தகங்களை கண்ணில் படும்போது வாங்குவேன். காரணமேயில்லாமல் அந்த புத்தகங்களுக்குள் மூழ்கிவிடுவேன். ஆனால் அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதே இல்லை. எல்லோரும் சிலாகிக்கும் "பொன்னியின் செல்வன்" நாவலை வாசிக்க ஒருபோதும் தோன்றியதில்லை. நான் எதை வாசிக்க வேண்டும் என்பதை அந்த குரங்குதான் தீர்மானிக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

அலுவலத்தில் வேலை செய்யும் நண்பன் ஒருவன் விலை கூடிய ஆங்கில காமிக்ஸ்க்களை வாங்கிக்குவிப்பான். எங்களுக்குள் புத்தகங்களை பரிமாற்றம் செய்வோம். அவன் வாங்கும் புத்தகங்களில் பாதிக்கு மேல் அவன் வாசித்ததில்லை என்பது ஆச்சர்யம் தரும் விஷயமாக இருந்தது.  அநேக தருணங்களில் டாலடிக்கும் அவனுடைய புத்தம்புதிய புத்தகங்களை நானே முதலில் வாசிப்பேன். அவனே இது ஒருவகை மனோவியாதி என்றான். அதாவது வாங்கி குவித்துவிட்டு அதனை வாசிக்காமல் அடுக்கி அழகு பார்ப்பது. நல்லவேளையாக எனக்கு இந்த வியாதி இப்போதில்லை. ஆனாலும் நான் வாசிக்கும் வீதத்தை விட வாங்கும்வீதம் அநியாயத்திற்கு அதிகம்தான். காணும் இடங்களிலெல்லாம் புத்தகங்களாக வாங்கிக்குவிக்கிறேன். ஆனால் உடனடியாக வாசிப்பதில்லை. அவற்றை வாசிக்க ஏதோ ஒரு உந்துதல் தேவைப்படுகிறது.  இப்படித்தான் ஒரு புத்தகவிழாவில் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் சிறுகதை தொகுப்பை ஆசைக்கு வேண்டினேன். ஆனால் அது எனது புத்தக அலுமாரியில் இரண்டு வருட ஆழ்ந்த தூக்கம் போட்டது.  ஒருநாள் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் கதைகளை அடிப்படையாக கொண்ட "துப்பறிவாளன்" படம் வருவதாக அறிந்தேன். அந்த தீப்பொறி எப்போதோ வாங்கிய புத்தகத்தை  வாசிக்க தூண்டியது. புத்தகத்தை வாசித்து முடித்த நான் அந்த படத்தை பார்க்கமுடியாமல் போனது இங்கு முக்கியமில்லை. இவ்வாறே "The Martian" என்ற புத்தகத்தை அதை தழுவிய படம் பார்க்க விருப்பத்தில் வாசித்து முடித்தேன். புத்தகம் வாசித்தவர்களுக்கு அந்த படம் பிடிக்காது என்று ஒரு நண்பன்  கூறினான். ஆகவே அந்த படத்தை பார்க்கவில்லை. இந்த புத்தகத்தை ஒவ்வொரு காலைப்பொழுதிலும் ரயிலில் வேலைக்கு போகும்போது வாசித்தேன். இப்புத்தகத்தின் கதை செவ்வாய் கிரகத்தில் நடப்பதாக இருந்ததால் ரயில் கூட செவ்வாய் கிரகம் போல மாயையை உண்டுபண்ணியது. இப்படித்தான் நான் வாங்கும் புத்தகங்கள் என்னுடைய வாசிப்புக்காக தவம் கிடக்கின்றன. எப்போதோ ஒரு நாள்தான் அவற்றுக்கு வரம் கிடைக்கின்றது.  அந்த நாள்தான் எப்போது என்று தெரிவதில்லை.



நான் காலைப்பொழுது வாசிக்கும் புத்தகத்தை இரவில் தொடர்வதில்லை. இரவுக்கு வேறு ஏதாவது புத்தகம் வாசிக்கிறேன். இப்படித்தான் "Bram Stoker"இன் டிராகுலா புத்தகத்தை காலைப்பொழுதின் இருபது நிமிட புகையிரத சவாரியில் மட்டுமே மூன்று மாதங்களாக வாசித்து முடித்தேன். இரவில் ஏதாவது ஒரு நகைச்சுவை நிறைந்த காமிக்ஸ் ஏதாவது வாசிப்பேன். நாய்கள்  ஊளையிடும் நடு ராத்திரியில், டிராகுலா புத்தகத்தை வாசிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது வேறு விஷயம். ஆனாலும் எனது மனவோட்டத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை அந்த குரங்கு தேர்வு செய்கிறது போலும்.


இப்போதெல்லாம் புத்தக விழாக்கள் கணிசமாக நடக்கின்றன. ஏதோ பொய்யான பரபரப்புடன் எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு அந்த நிகழ்வுகளுக்கு போகிறேன். சித்தம் பேதலித்தவன் போல புத்தகங்களை பார்வையிடுகிறேன். புத்தகங்கள் நிறைய வாங்குகின்றேன். அவை வீட்டினுள் ஆங்கங்கே புத்தகங்கள் சிதறி கிடக்கின்றன. இயலுமானவரை தேவையற்ற புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க முயற்சிக்கிறேன். ஆனால் என்னை போன்ற வியாதியஸ்தர்களை காணுவது அரிதாகவே இருக்கிறது. வீட்டில் குவிந்து கிடைக்கும் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே திண்டாடுகின்றேன்.  எது தேவை எது தேவையற்றது என்று வேறுபடுத்தவே முடிவதில்லை. அடுக்கும்போதே புத்தகங்களை நோட்டம் போடுவதற்கே பாதி நாள் போய் விடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தை அடுக்குவதற்காக தூக்கும்போதும் அப்புத்தகம் சம்பந்தமான நினைவுகள் வந்து அலைக்கழிக்கின்றன. இப்படியே நேரம் போய் விடுகிறது. கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இன்னொரு அறையை கட்டுவோமோ என்று யோசிக்கிறேன் ஆனாலும் வீட்டு சொந்தக்காரன் என்ன சொல்லுவானோ என்ற நினைப்பு அதனை அணைத்து விடுகிறது.












Saturday, September 24, 2016

Maus காமிக்ஸ்- வரலாற்றின் மேல் காய்ந்துபோன இரத்தத்துளிகள்

 சில மாதங்களுக்கு முன்னராக நண்பர் விஸ்வா பேஸ்புக்கில், உலகத்தில் தலைசிறந்த காமிக்ஸ் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டார். அதன்பெயரை குறிப்பிடாது, அதனை எங்களை ஊகிக்குமாறு கூறினார். நான் எனக்கு தெரிந்த சில காமிக்ஸ்களை வரிசைப்படுத்தினேன். இன்னும் சிலரும் ஊகிக்க முயன்று தோற்றனர். விஸ்வா எனக்கு அந்த புத்தகத்தின்
அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது "Maus" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் "எலி" என்று பொருள்படும்.  இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூகிள் செய்தபோது வந்த படங்களும் ஏமாற்றம் தந்தன. செய்திதாள்களில் வரும் அரசியல் கார்ட்டூன்  போன்ற படங்களே இருந்தன. நுணுக்கமான படங்கள் வரையப்பட்டிருக்கும் ஐரோப்பிய காமிக்ஸ் வாசித்து வளர்ந்த எனக்கு தலைசுற்றலை தந்தன. விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக ஒத்துப்போகும். மேலும் விக்கிபீடியாவில் "Maus" உருவான கதை சுவாரஸ்யம் தந்தது. ஆகவே அந்த காமிக்சை ஆன்லைனில் வாங்கினேன். புத்தகம் கைக்கு கிடைத்த போது, பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. தரமான பதிப்பு. ஆனாலும் இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை அப்போது இருக்கவில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது போலந்திலுள்ள யூதர்களும் கிட்லரின் இன அழிப்பிலிருந்து தப்பவில்லை. யூதர்கள் வசித்த இடங்களிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். பலர் "காஸ் சேம்பர்ஸ்" எனப்படும் மனித அழிப்பு சாதனத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். அதன்போது சில யூதர்கள் போர் முடியும் தருவாயில் உயிர் பிழைக்கிறார்கள். அதில் தப்பிய ஒரு யூதர்தான் இக்கதையை எழுதிய ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய "விலாடேக் ஸ்பிகேல்மன்". தனது தந்தையின் சொந்த கதையை கேட்டு அதனை ஒரு காமிக்சாக மாற்றியுள்ளார். ஆனால் வழமையான கிராபிக் நாவல்களில் வரும் சோகம் வழிந்தோடும் உண்மைக்கதை கிடையாது. வெறும் உண்மைக்கதை அவ்வளவுதான். படங்களில் மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களே வரையப்பட்டிருக்கும். யூதர்கள் எலிகளாக வரையப்பட்டிருப்பர். அதுபோலவே ஜேர்மானியர்கள் பூனைகளாகவும் அமெரிக்கர்கள் நாய்களாகவும் வரையப்பட்டிருப்பர். படங்கள் கார்ட்டூன் பாணியிலிருக்கும். இரண்டாம் உலக யுத்தக்கதைகளில் தானும் ஒரு பாத்திரமாக ஜரூராக நுழையும் கிட்லரும் இதில் இல்லை. ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய விலாடேக் ஸ்பிகேல்மன் சந்தித்த பாத்திரங்கள் மட்டுமே கதையிலிருக்கும். இரத்தம் சொட்ட சொட்ட வரும் வன்முறை சண்டைகாட்சிகளே இல்லை. ஆனால் விலாடேக் ஸ்பிகேல்மன் எதை எவ்வாறு சொன்னாரோ அதை அப்படியே பதிந்திருக்கிறார் கதாசிரியர் ஆர்ட்.


இந்த கதை இருவேறு காலங்களில் நகரும். ஒன்று 1970களில் தந்தையின் கதையை கேட்டறிய "ஆர்ட் ஸ்பிகேல்மன்" தந்தையின் வீட்டுக்கு பலமுறை விசிட் அடிக்கும்போது நடைபெறும் சம்பவங்கள். மற்றையது இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடைபெறும் வேதனை மிகுந்த காலப்பகுதி. இருவேறு காலப்பகுதிகளிலும் வெவ்வேறான சுவாரஸ்யங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கும்" அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நேர்மையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த உரையாடல்களில் போரினால் மனஉளைச்சலுக்கு உள்ளான ஒரு நபரின் மன உணர்வுகளும் முதுமையின் இயலாமையும் பளிச்சிடும். ஒரு காட்சியின்போது "விலாடேக்" ஒரு கறுப்பினத்தவரை இனத்துவேஷ வார்த்தைகளால் வர்ணிப்பார். அப்போது ஆர்ட் "நீங்கள் இவர்கள் மீது காட்டும் இனத்துவேஷம் எங்களுக்கும் ஜேர்மானியருக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்கிறது" என்று சாடுவார். அப்போதும் அவரது தந்தை சளைக்காமல் "நீ எப்படி யூதர்களையும் கறுப்பர்களையும் ஒப்பிடுவாய்" என்று சொல்லி கோபிக்கிறார். இதிலும் தனது தந்தை ஒரு இனத்துவேஷம் மிக்கவர் என்பதை மறைக்காமல் கதை சொல்லலில் நேர்மையை கடைப்பிடிக்கிறார் ஆர்ட். விலாடேக் முதுமையின்போது காட்டும் பிடிவாதம் காரணமாக ஆர்ட்டுக்கு வரும் தர்மசங்கடங்கள் வசிப்போருக்கு புன்னகையை வரவைக்கின்றன. விலாடேக்கின் மாத்திரைகளை எண்ணும் பழக்கம், உணவுப்பொருட்களை வீணாக்காது தனது மகனுக்காக எடுத்துவைக்கும் பழக்கம் போன்றவற்றை நானே பல வயதானவர்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.
அதனை காமிக்ஸ்வடிவில் காணும்போது அதில் வருகின்ற உரையாடல்கள் நெகிழ்ச்சியை தருகின்றன.

இக்கதையை தந்தையிடமிருந்து கேட்டறிந்து எழுத ஆரம்பித்தபோது ஆர்ட்டின் அம்மாவாகிய "அஞ்சா" உயிரோடில்லை. அதற்கு முன்னராக சில வருடங்களுக்கு முன்னாலேயே தற்கொலை செய்துவிட்டிருப்பார். ஆகவே "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கு" ஜேர்மானிய கொலைமுகாம்களில் நடந்த இனஅழிப்பை பற்றி தனது தாயிடம் கேட்டறிய வாய்ப்பில்லாமல் போனது.
ஆனால் "அஞ்சா" டயரி எழுதும் பழக்கமுள்ளவர். ஆனாலும்  "அஞ்சாவின்" தற்கொலையின் பின்னரான காலப்பகுதியில் இருந்த மனஉளைச்சலில் தானே அவற்றை எரித்துவிட்டதாக தந்தை கூறும்போது  ஆர்ட் மனவருத்தம் கொள்கிறார். தனது தாயின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்த கடைசி சந்தர்ப்பமான டயரி எரிந்து போனதை எண்ணி மனம் வருந்துகின்றார். மீண்டும் மீண்டும் தந்தையின் வீட்டில் டயரியை தேடும்போது ஒரு படைப்பாளனின் வருத்தம் வாசிப்போரையும் தொற்றிக்கொள்கின்றது.

வதைமுகாமில் இருக்கும்போது விலாடேக் உணவுபொருட்களை பண்டமாற்று செய்து உயிர்பிழைக்கும் காட்சிகள் அவரின் புத்திசாலித்தனத்தை பறைசாற்றுகின்றன. கடைசி வரையிலும் உயிரை தக்கவைக்க விரும்பும் அவரின் மனதைரியம் நிறைய பாடங்களை எங்களுக்கு சொல்கின்றது. இப்படி உயிர்பிழைப்பதற்காக வித்தியாசமான தொழில்களை செய்து தப்பிக்கும் காட்சிகள் அபாரம்.

இத்தனைக்கும் இந்த சீரியசான கதையை நகர்த்துவது பொம்மை வடிவிலுள்ள எலிகளும், பூனைகளும், பன்றிகளும்தான். இந்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் எப்படி உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் முகத்தை வைத்திருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கதையை வாசிக்கத்தொடங்கி ஐந்தாறு பக்கங்கள் முடிந்த பின்னர். எலிகள், பூனைகளாவும் உங்கள் கண்களுக்கு யூதர்களாகவும், ஜேர்மானியர்களாகவும் தெரிவார்கள். என்னதான் ஒரு எலியை வரைந்திருந்தாலும் அதன் முகபாவம், வயது வேறுபாடு, பால் வேறுபாடு என்பனவற்றை சரியாக வேறுபடுத்தி விளங்குமாறு வரைந்திருப்பார் ஆர்ட்.

இந்த புத்தகம் ஒரு த்ரில்லர் இல்லை. ஆக்சன் இல்லை. ஹீரோ வில்லன் இல்லை. கடைசியில் வில்லனை எப்படி ஹீரோ அழிக்கபோகிறாரோ என்ற பதைபதைப்பு இல்லை. ஆகவே நான் இந்த புத்தகத்தை வாசிப்பதில் அவசரம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து பக்கங்களாக இரண்டு மாதங்கள் வாசித்தேன். ஒரு கிழமை வாசிக்கவிடின் கதை மறந்து போகுமோ என்று ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால் இந்த புத்தகம் வாசித்து முடித்தபின்னர் ஒரு நல்ல மனஅமைதி கிட்டியது. சில புத்தகங்களை வாசிக்கும்போது  முடிந்துவிட்டதே என்று வருந்துவோம். அந்த கவலையும் எனக்கு வரவில்லை. ஊடகத்துறையில் முதன்மையான புலிட்சர் விருது வென்ற ஒரே காமிக்ஸும் இதுதான்.