Sunday, April 12, 2015

பிரதீப்!!

பிரதீப்...! இந்த பெயரை கேட்டால் உங்களுக்கு என்ன எண்ணம் மனதில் தோன்றுகிறது. எனக்கு இந்த பெயர் பல ஞாபங்களை கொண்டுவருகிறது. பிரதீப் அக்காலத்தில் கொஞ்சம் டிரென்டியான பெயர். பிரதீப் என்ற பெயரையுடைய நபரை சந்திக்கபோகிறேன் என்றால் அந்த பெயரே ஒருவித எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்திவிடும். கொஞ்சம் புத்திசாலியான மாடர்னான ஒரு பயலை சந்திக்கபோகிறோம் என்று நினைத்துகொள்வேன். எனக்கு தெரிந்து பலபேர் அந்த பெயருடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். பிரதீப் என்ற பெயருடைய ஒருவன் என்னுடன் ஆறாம் ஆண்டுவரை, கிராம பள்ளிகூடத்தில் படித்துவிட்டு நகர பாடசாலைக்கு மாறினான். அவன் மாறியதால் அவன் எடுத்துவந்த வகுப்பின் "முதலாம் பிள்ளை" என்ற பெருமை எனக்கு தற்காலிகமாக கைமாறியது. பத்தாம் ஆண்டு படிக்கும்போது பிரதீப் என்ற பெயருடையவன் பக்கத்து வீட்டில் குடியேறினான். என்னுடன் அடிக்கடி கிரிக்கெட் விளையாடினான். நன்றாக "லெக் ஸ்பின்" போடுவான். கண்ணில் "போல்" பட்டு கொஞ்ச காலம் கப்பல் கொள்ளைக்காரன் மாதிரி ஒரு கண்ணில் கட்டுடன் திரிந்தான்.

எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, பக்கத்துவீட்டில் இருந்த பிரதீப் அண்ணாவும் வித்தியாசமான பேர்வழி. வீட்டில் அதிகம் இருக்கமாட்டார். அவர் அப்படி எங்கே போகிறார் என்று அந்த வயதில் எனக்கு புரியவில்லை. எப்போதாவது காணும்போது "கண்மணி" கடையில் தோடம்பழ முட்டாசி வாங்கித்தருவார். எங்கள் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு தியேட்டருக்கு தெருவில் உள்ள பொடியன்களை படத்துக்கு கூட்டிக்கொண்டு போனார். சேர்ட்டின் உள்ளே தோட்டா மாலை போட்டிருப்பார். அதை எங்கே வாங்கினீர்கள் என்று அப்பாவியாக கேட்டுவைத்தேன். கொஞ்சம் மழுப்பலாக சிரித்துக்கொண்டு "திருவிழா காலத்தில் 'கண்மணி' கடையில் இது விக்கும்" என்றார். ஆனாலும் கண்மணி கடையில் தோட்டா விற்றதை இதுவரை கண்டதில்லை. அதை பற்றி மேலும் விசாரிக்க பிரதீப் அண்ணாவை மறுபடியும் காண முடியவில்லை.

கம்பசிலும் "பிரதீப்" என்ற பெயருடைய இன்னொரு நபரையும் சந்தித்தேன். என்னைவிட படிப்பில் திறமைசாலி. இவ்வாறான அனுபவங்கள் காரணமாக, பிரதீப் என்ற பெயருள்ள எவனும் என்னைவிட வல்லவன் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இப்படித்தான் எனக்கு சிறுவயதில் பெயர் சம்பந்தப்பட்ட வினோத பழக்கமிருந்தது. எனது வகுப்பில் இருக்கும் மாணவர்களின் திறமை, குணாதிசயம் போன்றவற்றை அவர்களின் பெயர்களுடன் தொடர்பு படுத்தியே சிந்திப்பேன். செழியன் என்பவன் என்னை முந்தி வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தால், செழியன் என்ற பெயருள்ள எல்லா பயல்களும் தீவிர புத்திசாலிகள் என்ற மனதில் விம்பம் உருவாகும். இப்படி சில வினோத கோட்பாடுகள் சிறுவயதிலே மனதில் வைத்திருப்பேன். நாங்கள் இதுவரை சந்திக்காத நபரின் பெயர் அந்த நபருடன் எங்களுக்கான முதல் அறிமுகத்தை தருகிறது. பின்னர் அந்த நபரை சந்திக்கும்போது அநேக நேரங்களில் ஏமாற்றம்தான்  மிஞ்சுகிறது.

வயது ஏற ஏற பெயர் மூலமாக நபரின் உருவ அமைப்பு குணாதிசயங்களை தீர்மானிக்கும் பழக்கம் குறைந்தது விட்டது. சமீப காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு அவ்வாறான கோட்பாடு பிழை என்பதை உறுதி செய்தது. கம்பசில் கடைசி வருடம் படிக்கும்போது புதிதாக தொடங்கவிருந்த பாடத்துக்கு புதிதாக ஒரு விசிடிங் லெக்சரர் வருவதாக ஏற்பாடாகவிருந்தது. அவர் ஒரு சிங்களவர். சிங்கள பெயர்களை உச்சரிக்கும்போது வரும் 'ஷ', 'ஹ' சத்தங்களுக்கு ஏற்றவாறு குணாதிசய நியமங்களை உருவாக்கிக்கொண்டேன். அந்த லெக்சரரின் பெயர்கூட ஒரு கேட்டு சலித்ததொரு வழமையான சிங்கள பெயர். முதலாவது லெக்சருக்கு வழமைபோல ஐந்து நிமிஷம் லேட்டாக போனோம். ஆளை காணவில்லை. லெக்சர் ஹோலுக்கு வெளியே ஒரு பயல் ஜீன்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான். மெதுவாக உள்ளே அவன் நடந்து வந்தான். அவன் கதைக்கதொடங்கிய பின்னரே அவர்தான் எங்கள் புதிய லெக்சரர் என்ற உண்மை எங்களுக்கு புரிந்தது. அவருக்கு ஒரு லெக்சரருக்குரிய வழமையான தோற்றமில்லை. ஆனால் வந்த முதல் நாளே இரண்டு அசைன்மென்ட் தந்து கிலியை ஏற்படுத்தினார். அவருடைய லெக்சர்களின்போது அசைன்மென்ட் கொப்பி அடித்தால் அடுத்த லெக்சரில் பெயர்களை வாசித்து அவமானப்படுத்துவார்.

அவர் போலவொரு ஆசாமிக்கும் பெயருக்கும் சம்பந்தமில்லை. அவர் போடுற "ஆர்மனி" டீ-சேர்ட்டுக்கும் அவர் தருகிற கெடுபிடி அசைன்மென்ட்டுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. இந்த ஆசாமியை சந்தித்தபின்னர் எவரையும் அவர்கள் பெயர்கள் மூலமாக நபரின் உருவ அமைப்பு மூலமாகவோ குணாதிசயங்களை தீர்மானிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது.

போனவாரம்தான் எங்கள் ஆபீஸ்ஸில் "பிரதீப்" என்று ஒரு பயல் சேர்ந்திருக்கான். பயல் எப்படிப்பட்ட ஆளா இருப்பானோ.. பார்ப்போம்..

2 comments: