![]() |
| 155இன் மானசீக தோற்றம் |
எனது கொழும்பு பாடசாலை காலங்களில், யாழ்பாணத்தில இருந்து ஒரு நண்பன் எங்களது கொழும்பு பாடசாலையில் சேர்ந்தான். அவன் எல்லா வேலையையும் கொஞ்சம் ஸ்லோவாக செய்வான். அவனுடைய யாழ்ப்பாண பாடசாலையில் அவனுடைய பட்டப்பெயர் "ஆமை". ஆனால் அந்த பெயர் கொழும்பு சூழலுக்கு அவ்வளவு ஏற்றதாக இருக்கவில்லை. எல்லோரும் கூடிப்பேசி அவனுக்கு வைத்த பெயர் "நூற்றிஅம்பதைந்து". சில பரீட்சைகளில், அவன் நேரம் முடிந்தபின்னரும் எழுதிக்கொண்டிருப்பான். "ஏய் நூற்றிஅம்பதைந்து! நேரம் முடிஞ்சிட்டுது. பேப்பரை தா!" என்று வகுப்பாசிரியரே கேலி செய்யும் அளவுக்கு பிரபலமான பட்டப்பெயராக விளங்கியது. கொழும்பில் இருக்கும் ஒவ்வொரு நண்பர் கூட்டத்திலும் ஒரு "நூற்றிஅம்பதைந்து" நிச்சயம் இருப்பான். அவரவர் கதைக்கும் மொழிகேற்றவாறு 155 "வண் டபுள் பைவ்" ஆகவோ "எக்க சீய பணஸ் பகாய்" ஆகவோ இருக்கலாம்.
![]() |
| இஸ்ஷரா யண்ண மள்ளி! |
ஆனாலும் நூற்றிஅம்பதைந்தினை தங்களுக்கு ஆதாயமாக பாவித்தவர்களும் உண்டு. A/L நேரத்தில சிவா வெள்ளவத்தையில் டியுஷன் கிளாஸ் முடிந்ததும், நூற்றிஅம்பத்தைந்தில ஸ்டைலா ஓடிப்போய் ஏறுவான். "ஏண்டா நீ வெள்ளவத்தையில் இருந்து கொண்டு ஏண்டா மட்டகுளிக்கு ஒவ்வோரு நாளும் போறே?" என்று கேட்டுவைத்தேன். "நான் சுவேதாவை லவ் பண்றன்டா. மட்டக்குளி பஸ்ஸில ஏறினா அவளை பார்க்கலாம்" என்றான்.
"என்னடா அதுக்கு போய் அந்த மானங்கெட்ட பஸ்ல ஏறத்தான் வேணுமா" என்றேன். "இவன் யாருடா புரியாத ஆளா இருக்கான். அவள் மட்டக்குளியவில் இருந்து வாறது எனக்கு எவ்வளவு அதிஷ்டம் தெரியுமா.. இந்த ஒரு பஸ்ஸில் ஏறினால் குறைஞ்சது 2 மணித்தியாலமாவது சைட் அடிக்கலாம். வேற எந்த பஸ்ல இப்படி ஒரு சௌகரியம் கிடைக்குமா. நீயும் மட்டக்குளி ஷ்யாமாவை சைட் அடி.. நூற்றிஅம்பதைந்து ஒரு சொர்க்கம் என்றது தெரியும்" என்றான். இப்படி ஒரு பட்டாளம் 155இலே காதல் வளர்த்து இன்பம் கண்டது.
நூற்றுஅம்பதைந்து எனது வாழ்க்கை என்னும் பயணத்தில் மறுபடியும் குறுக்கிடும் என்று நான் கனவில்கூட நினைத்துப்பார்க்கவில்லை. நானும் கடந்த நான்கைந்து வருடங்களாக மத்தியானச்சாப்பாடு கட்டிக்கொண்டு "அம்மா! நான் போயிட்டு வாரேன்" என்று சொல்லிக்கொண்டு என்னுடைய ஆபீஸுக்கு போய் வந்தேன். எனது ஆபீஸ் 100 பஸ் ரூட்டில் இருந்ததால் நூற்றிஅம்பதைந்தினை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஒருநாள், பக்கத்தில் இருக்கிற பயல் ஆபீஸ் புது இடத்துக்கு மாறப்போகுது என்றான். மனதில் கொஞ்சம் ஆர்வம் மேலிட்டது. ஐந்து பேர் சேர்ந்து Google Mapஇல் புது இடத்தை ஆராய்ந்தோம். அந்த இடத்துக்கு போவதற்கு தேவையான பஸ் ரூட் பற்றிய ஆலோசனை தொடங்கியது. ஒருத்தன் "ட்ரெய்னில் பெட்டாவுக்கு போய் 120 பஸ் எடு" என்றான். இன்னொருத்தன் "ட்ரெய்னில் மருதானைக்கு போய் பதினைஞ்சு நிமிஷம் நடந்தா இடம் வரும்" என்றான். ஒருத்தனுக்கும் நேரடியாக போகவல்ல சரியான பஸ் ரூட் தெரியவில்லை. அப்போது உள்ளே எங்கட Technical Lead (Tech. Lead) பற்றி ஞாபகம் வந்தது. மனுஷனுக்கு கொழும்பு பத்தி அக்குவேறு ஆணிவேறா தெரியும். அவரிடம் ஒரு கேள்வி கேட்டு அவருக்கு பதில் தெரியாவிட்டால் அந்த கேள்வியை அடுத்ததா ஆண்டவனிடம்தான் கேக்கணும் என்பான் நீலன். ஆகவே அவரிடம் பஸ் ரூட் பற்றி விசாரித்தேன். "நீ தெஹிவளையிலிருந்து இருக்கிற.. ஆகவே நீ நூற்றிஅம்பதைந்துதான் எடுத்து புது இடத்துக்கு போகணும்" என்றார். கொஞ்சம் தலையை சுற்றியது. யாரோ என்னை பார்த்து தொடர்ந்து சிரிப்பது போன்றதொரு வினோத உணர்வு ஏற்பட்டது.
இது ஏதோ ஆண்டவனின் புது சோதனை என்று நினைத்துக்கொண்டேன். நூற்றிஅம்பதைந்தில் ஏறவே கூடாது என்று மனதில் சபதம் மேற்கொண்டேன். புதிய இடத்தில் ஆபீஸ் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளில் ட்ரெய்னில் நாற்பது நிமிட பயணத்தின் பின்னர் ஒரு மேம்பாலம் ஏறி கடந்து Google Mapஇன் உதவியுடன் காலை வெயிலில் வியர்வை வழிய பதினைந்து நிமிட நடையில் ஆபீஸ் போய் சேர்ந்தேன். இப்படியே பத்து நாள் போய்வந்தேன். காலையில் ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிட வேண்டியிருந்தது. அந்த பத்து நாட்களிலேயே எனது எடை 5 கிலோவால் குறைந்தது. போதாக்குறைக்கு ஆபீஸ்ஸுக்கு லேட்டா போய் yellow card வாங்கினேன்.
![]() |
| இது சாம்பிள்தான் 155 கிடையாது :) |
இப்படியே நாட்கள் எனது வைராக்கியத்துடன் கழிந்தன. ஒருநாள் வெளியே சென்றிருந்த சமயம். எனக்கு தெரிஞ்ச அங்கிள் ஒருவர் என்னை பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டார். "என்ன அங்கிள்! நீங்களும் மறதி பேராசிரியர் வேலைக்கு சேர்ந்திட்டீங்களா" என்றேன். "இல்லைடா, நீ கொஞ்சம் கறுத்து ஒல்லியா போயிருக்கியா.. அதான் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமாச்சுது.. என்ன ஆபீஸ்ல வேலை கூடவா" என்றார். "நான் கறுத்து போயிருக்கேன்" என்ற செய்தி என்னவோ செய்தது. இதற்கு மேலும் கறுக்க முடியாது என்று இதுநாள்வரை நினைத்திருந்த எனக்கு பெரிய அடிதான். எல்லாம் வெயிலில் தினமும் நடக்கும் 15 நிமிஷ நடைதான் காரணம் என்று மனதில் கருவிக்கொண்டேன். "என்ன செய்றது.. ஆபீஸ்சை வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. அந்த ஸ்லோ பஸ் நூற்றி அம்பதைந்தில மட்டும்தான் போகமுடியும். ஆனா ட்ரெய்னில போய் 15 நிமிஷம் வெயிலில நடக்கணும்" என்று எனது சோகக்கதையை சொன்னேன். "அந்த இடத்திலயா புது ஆபீஸ் இருக்குது. உனக்கு 155 மட்டும்தான் சரிவரும். என்ன செய்றது அந்த பஸ்காரன் பின்னுக்கு பார்த்துத்தானே ஓட்டுறான்.. ஆனா வேற வழியில்லையே" என்றார். இப்படி பலபேர் எனது மாறிவருகிற நிறத்தை பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்னார்கள். "மச்சான்! இப்படியே போனால் நீ புதுசா ஐடென்டி கார்ட் எடுக்கணும். வர வர உன்ட முகம் மாறி வருதுடா" என்று வயிற்றில் புளியை கரைத்தான் நீலன். ஆபீஸ்ஸில் பெண்கள் யாராவது சிரித்தாலும் என்னை பார்த்து சிரிப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. இதைப்பற்றி இரண்டு நாள் நித்திரையில்லாமல் யோசித்ததில் எனது மானத்தை விடவும் எனது தோலின் நிறத்தை பேணுவது அவசியம் என்று தோன்றியது.
இப்பொழுதெல்லாம் சரியாக காலை எட்டரை மணிக்கு நூற்றி அம்பதைந்தில் ஏறுகிறேன். எனது நடையில் இருக்கும் பரபரப்பு இப்போது இல்லை. முகத்தில் ஒரு மகானுக்குரிய அமைதி இருக்கிறது. பஸ்ஸில் ஏறி ஒரு மூலையில் இடம் தேடுகிறேன். இடம் கிடைக்காவிட்டாலும் எந்தவித ஏமாற்றமும் இல்லை. கண்டக்டர் இரண்டு ரூபா மிச்சம் தராவிட்டாலும் திருப்பி கேட்கமாட்டேன். கிடைக்கும் சீட்டில் அமைதியாக இருந்து பெரிய பெரிய புத்தகங்களாக கொண்டு போய் படிக்கிறேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை. பஸ் எப்போது போய் சேருமோ என்ற படபடப்பு இல்லை. எப்போது கொண்டு விடுகிறானோ. அப்போது இறங்கிக்கொள்கிறேன். எவ்வளவு லேட்டானாலும் என் முகத்தில் அதே புன்முறுவல்தான். நீங்கள் ஏதாவது ஒரு நூற்றிஅம்பதைந்து பஸ்ஸில் என்னை காணமுடியும். அப்போது ஒரு மூலையில் ஒரு புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு இருப்பேன். வந்தீர்கள் என்றால் ஒரு மணித்தியாலத்துக்கு குறையாமல் ஆறுதலாக கதைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.
155 பஸ்ஸில் ஏறி அவஸ்தை படும் ஆன்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்
**நான் இந்த பதிவை எழுதுவதற்கான ஐடியாவை 155ல் பயணிக்கும்போதே யோசித்தேன். உங்களுக்கும் சிந்தனை வறட்சி ஏற்பட்டால் 155க்கு வாங்கோ, சேர்ந்து யோசிக்கலாம்.



