Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Friday, June 7, 2013

ஆல்பியின் கல்யாணம்

அல்பிரடோவை எனக்கு இருபது நாளாகத்தான் தெரியும். நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த கம்பனியில் அவன் System admin. அதாவது எங்களுக்கு வரும் network சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது தலையாய கடமை. அவனை மெக்ஸிகோக்காரன் என்றுதான் எங்களுக்கு தெரியும். ஐம்பது வயதானாலும் முப்பத்தைந்து வயது ஆண்மகன் போன்ற ஒரு மிடுக்கான தோற்றம் இருக்கும். Officeக்கு smartஆக வருபவர்களில் இவனும் ஒருவன். அவனை "ஆல்பி" என்று செல்லப்பெயர் வைத்து
கூப்பிட்டால் சந்தோசப்படுவான். ஆகவே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம். எவ்வளவு கஷ்டமான பிரச்சனை என்றாலும் நிதானமாக செயல்படுவான். ஒவ்வொரு நாளும், அவன் வேலை முடிந்தது வெளியேறும்போது நேரத்தை பார்த்தால் சரியாக மணி ஆறு என்று
காட்டும். ஆனாலும் ஆறு மணிக்கு.பத்து நிமிடங்களுக்கு முன்னதாக யார் என்ன வேலை கொடுத்தாலும் ஒன்றும் சொல்லாமல் பொறுப்பேற்பான். ஆனால் மாலை ஆறு மணியானால் வைத்ததை வைத்துவிட்டு டாண் என்று வெளியேறி விடுவான். இப்படித்தான் ஒரு முறை IT manager ஏதோ
ஒரு முக்கியமான விஷயத்தை கொடுத்துவிட்டு Washroom போய் வருகிற gapஇல் ஆல்பிரடோ ஆறு மணிக்கு escape ஆகி விட்டான். IT Manager தாம் தூம் என்று குதிக்க அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் அந்நிகழ்வை பற்றி chat செய்து விவாதித்தோம். மதிய உணவு இடைவேளையின்போது தாராம் சிங் IT Manager முதல் நாள் கோபத்தில் கத்தியது போன்று நடித்துகாட்டினான். அல்பிரடோ அதை கண்டு கொள்ளவில்லை. தாராம் சிங் அல்பிரடோவுடன் எப்போதும் எதாவது ஒரு விசயத்துக்காக கொளுவிக்கொண்டிருப்பான். இவர்கள் இரண்டு பேர்களிடையே எப்போதும் எதாவது ஒரு சப்பை விசயத்துக்காக விவாதம் நடக்கும். "இந்த மெக்ஸிகோக்காரர்கள் எல்லாம் இப்படித்தான்.. இங்கிதம் தெரியாத பயல்கள்" என்று தாராம் சிங் ஸ்டைலான ஆங்கிலத்தில் முடிவுரை வழங்குவான். இதனை தமிழில் சொல்லும்போது ஒரு மாதிரியா இருந்தாலும் தாராம் சிங்கின் ஆங்கில உச்சரிப்பு அதன் அர்த்தத்தின் காரத்தை குறைத்து விடும்.

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் பின்னர் கொஞ்ச நேரம் Table tennis விளையாடுவோம். IT Manager ஏதாவது ஒரு மீட்டிங்க்கு போய் விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக விளையாடுவோம். தாராம் சிங் எப்போதும் அல்பிரடோவுடன் மோதுவான். தாராம் சிங்க்கு எனது வயதுதான் இருக்கும். சும்மா வளைந்து வளைந்து விளையாடுவான். ஆல்பி மூச்சிரைக்க கஷ்டப்பட்டு ஓடியாடி விளையாடுவான். தாராம் சிங் வென்று விட்டால் வெற்றியில் ஐந்து நிமிடமாவது கொக்கரிப்பான். அதனை தடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அல்பிரடோ உயிரை கொடுத்து விளையாடுவான். ஆனாலும் அவன் ஒரு முறையும் வென்றதாக சரித்திரம் இல்லை. இரண்டு மூன்று மேட்ச் தோற்ற பின்னர்தான் அப்பிராணியான என்னுடன் விளையாட வருவான் அல்பிரடோ. என்னுடன் விளையாடி வெற்றி பெற்று மனதை தேற்றிக்கொள்வான்.
வேலை நேரத்துக்கு முடியும் நாட்களில் என்னை காரில் ஏற்றி சென்று ரயில் நிலையத்தில் விட்டு விடுவான். அவனால் எனது கட்டாய அரை மணி நேர நடைபயிற்சியிலிருந்து தப்பித்துக்கொள்வேன். அவ்வாறான நாட்களில் அவனுடன் உரையாட வாய்ப்பு கிடைக்கும். "நீங்க எப்ப மெக்ஸிகோவிலிருந்து வந்தீங்க" என்று ஆரம்பித்தேன். "என்னுடைய சொந்த நாடு பொலிவியா.. இந்த அவுஸ்திரேலியர்களுக்கு பொலிவியா என்றோதொரு நாடு உலக Mapஇல் இருப்பதே தெரியவில்லை.. ஆகவே பக்கத்தில் இருந்த மெக்ஸிகோவை எனது நாடு என்றேன். எல்லோருக்கும் விளங்குது" என்றான். இப்படி கதைத்துக்கொண்டே காரில் போகும்போது பின்னால் வந்த கறுப்பு கார் எங்கள் காருக்கு அண்மையாக overtake செய்து கொண்டு போனது. பத்து சென்டிமீட்டர் தூரம்தான் இருந்திருக்கும். "இப்படியே போ உனக்கு நரகம்தான் கிடைக்கும்" என்று கூவினான் ஆல்பி. அதோடு சேர்த்து, இரண்டு மூன்று ஸ்பானிஷ் கெட்ட வார்த்தை சொன்னான். நல்லவேளை எனக்கு ஸ்பானிஷ் தெரியாது. இங்கு மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

"இந்த பயல்களுக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை" என்றான். அந்த கறுப்பு காரின் பின்னால் விரட்டி கொண்டு போனான். வேகம் என்றால் பயங்கர வேகம். எனக்கு குடல் தொண்டையில் தட்டுபடுவது போல உணர்ந்தேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் தாண்டி கார் சீறிக்கொண்டு போவதை பார்த்து முழித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இடம் வந்து விட்டது. என்பதை சொல்லுவமோ என்று யோசித்து அவனது சிவப்பேறிய முகத்தை பார்த்ததுமே ஒரு வார்த்தை வரவில்லை. பத்து நிமிஷ வெறி பிடித்த ஓட்டத்தின் பின்னர் அந்த கறுப்பு காரை நெருங்கினோம். கண்ணாடியை திறந்து நடுவிரலை உயர்த்தியவாறு அந்த காரை overtake செய்தான். அதன்பின்னர்தான் அவனது தலைக்கேறிய இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பாகங்களுக்கு சென்றடைய முகத்தில் கடுமை தன்மை
குறைந்தது. "எப்படி துரத்தி பிடிச்சேன்.. பார்த்தாயா" என்றான். நான் திரு திருவென்று முழிப்பதை அப்போதுதான் கவனித்திருந்தான்.

"அடடா.. ரயில் station தாண்டிடுச்சே" என்றான். அப்போதுதான் அவனது கோபத்தினால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை அவதானித்திருந்தான். திடீரென்று சிரித்துக்கொண்டே "நான் எப்பவுமே இப்படித்தான், என்னை ஒருவரும் கார் ஓடுவதில் மிஞ்சி விட முடியாது." என்றான். "இல்லை பரவாயில்லை என்னை அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டால் பரவாயில்லை" என்றேன் எச்சிலை விழுங்கிக்கொண்டே. "எனக்கு கொஞ்சம் கூட கோபம் வரும். அவுஸ்திரேலியாவுக்கு வரும்முன்னர் பொலிவியா இராணுவத்தில் இரண்டு வருஷம் இருந்திருக்கேன். அப்போதெல்லாம் எடுத்ததேற்கெல்லாம் கோபம் வரும். இப்ப எவ்வளவோ better" என்றான். ஒருவாறாக அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டபின்னர்தான் எனக்கு நிம்மதி வந்தது. அவனுக்கு நன்றி சொல்லியபோது எனக்கே நான் சொன்னது காதில் எதுவும் விழவில்லை.

இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒரு நாள் மத்தியானம் சாப்பிட சூரிய வெளிச்சத்தில் அமர்ந்திருந்தோம். வசந்த காலம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. இவ்வளவு காலம் இருந்த கடுமையான குளிரினால் வெளியே செல்வதை தவிர்த்தோம். வசந்த காலத்தொடக்கத்தில் இதமான சூரிய ஒளியில் உணவருந்தினோம். தாராம் சிங் அன்று  காலைதான் IT Managerஉடன் கடுமையாக ஒரு deadline சம்பந்தமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அதனால் Lunch Timeஇல் கூட சிரத்தையாக வேலை செய்வது போல பாவனை செய்து கொண்டிருந்தான். ஆகவே அவன் எங்களுடன் உணவருந்த வரவில்லை. சைனாக்காரன் "சான் லீ" அன்று லீவு. ஆகவே அன்று நானும் ஆல்பியும் மாத்திரமே அன்றைய Lunch இல் ஆஜர். தாராம் சிங்கின் அறுவை காரணமாக வாயை திறக்காத ஆல்பி அன்று மட்டும் கொஞ்சம் சகஜமாக கதைத்தான்.

"இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் பொலிவியாவுக்கு திரும்பி போயிருக்கிறீங்களா"

"ம்ம்.. அதுக்கு பன்னிரெண்டு வருசமாச்சு.. ட்ரெயினில் போய் இறங்கினப்போ ஊரே என்னை பார்க்க வந்திச்சு"

"அண்ணை ஊருக்குள்ள செல்வாக்கான ஆசாமி போலும்" என்று சிரித்தேன்.

"இல்லை. எனக்கே ஆச்சர்யமாத்தான் இருந்திச்சு.. அண்ணாதான் சொன்னான்.. எனக்கு அம்மா கல்யாண ஏற்பாடு செஞ்சிருந்தா என்று"

"மகிழ்ச்சியான விசயம்தானே.. உனக்கு அதிர்ஷ்டம்தான் போ" என்றேன். அவனின் முகத்தில் சலனமில்லை. எனது முகத்தை உற்று நோக்கினான்.

"பன்னிரெண்டு வருஷம் கழிச்சு எல்லோரையும் பார்க்க போறேன். யாரோ ஒரு பொண்ணை காட்டுறாங்க. இதுவரை பார்க்காத ஒரு புதுபெண்ணு. அடுத்த நாள் என்னோட மனைவி. என்னால் எச்சிலை கூட விழுங்கமுடியவில்லை"

"கொஞ்சம் அதிர்ச்சியான விசயம்தான். பிறகு என்ன நடந்திச்சு" என்றேன் ஆர்வமாக.

"அப்பா இல்லாத எங்களை அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தா.. அப்போது அது ஞாபகத்துக்கு வரலை.. அன்றைக்கு அவளை கடுஞ்சொற்களால் திட்டினேன். அண்ணா பிடித்திராவிட்டால் அவளை அடிச்சிருப்பேன். அம்மா எனக்கு செஞ்ச காரியத்துக்கு இன்னும் அவளை

மன்னிக்கவில்லை" என்றான். அவன் கண்களில் முட்டிய கண்ணீரால் கண்கள் வசந்த கால சூரிய ஒளியில் ஒளிர்ந்தது. "எல்லோரும் என்னிடம் கதைத்தார்கள். அண்ணா என்னை சமாதானப்படுத்தினான்.. என்னோட நிலைமையை வனேஸ்ஸாவுக்கு தனியாக சந்தித்து விளக்க முயற்சித்தேன். இந்த கல்யாணத்தை மிகவும் எதிர்பார்த்திருந்ததாக வனேஸ்ஸா சொன்னா. மற்றவங்க மனசை புண்படுத்த என்னால முடியலை"

"வனேஸ்ஸா சொன்னவுடனே ஹீரோ ஒத்துக்கொண்டிருக்காரு போல" என்றேன் சிரித்தவாறு.

"இல்லை. இது இப்ப சாதாரண விசயமா இருந்தாலும் அப்போது என்னை வாட்டியேடுத்தது. அதை பற்றி நினைத்தாலே இப்போது கூட நெஞ்சில் இடது பக்கத்துக்கு கீழே ஒரு வலி வரும்" நெஞ்சை மெதுவாக அழுத்தினான். இப்போதுகூட வலி வந்திருக்க வேண்டும்.

நான் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு மௌனமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.

"ஏய் நண்பா! என்ர சோகக்கதையை கேட்டு அழுதிறாத! தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தாலும் இப்ப உலகத்திலே மகிழ்ச்சியான couple நாங்கதான். விஸ்கி அடிச்சது மாதிரி மூஞ்சியை வச்சிருக்காத. வா ஒரு Drive போய் வருவோம். Dessert வாங்கித்தாறேன். செலவு என்னோடது" என்றான்.

Monday, September 24, 2012

கடைசி இருபது நாட்கள்...!

"58, 59, 60 அப்பாடா ஒருவழியாக அறுபது நாட்களை இந்த நாசமா போற தேசத்தில் கடத்தியாயிற்று" என்று எனக்கு நானே சந்தோசப்பட்டேன். இலங்கைக்கு திரும்ப இன்னும் இருபது நாட்களே இருந்தன. ஆனால் இப்போது துருவா இல்லை. அவனை இலங்கைக்கு அனுப்பி விட்டார்கள். கார் ஓடத்தெரிந்த புண்ணியவான் அவனும் இப்போது இல்லை. நானும் ஜோவும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். இப்போது Trainஇல்தான் Officeக்கு போக வேண்டிய துரதிஷ்டநிலை. இது பற்றாது என்று Officeஇலிருந்து அண்மையாக இருக்கும் Railway station சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. ஆகவே ஒவ்வொரு நாளும் நடைராசாதான். அதுவும் ஜோவுடன் நடக்க வேண்டும்.

ஜோ ஒரு வினோதப்பிறவி. தான் ஒருவன்தான் உலகத்திலே பிழைகளுக்கு அப்பாற்பட்ட ஆத்மா என்ற எண்ணங்கொண்டவன். அவனது தொலைந்து போன மூன்று Socksகளை குப்பைகூடையில் எறிந்தது நான்தான் என்று மனதார நம்புபவன்.  ஆகவே நாங்கள் எலியும் பூனையும் போல சண்டையிடுவதை நிறுத்த அந்த ஆண்டவனே நேரே வந்து கெஞ்சினாலும் முடியாத சமாச்சாரம். 3 கிலோமீட்டர் தூரம் சண்டை பிடித்துக்கொண்டு நடந்தால் தூரம் அதிகம் போல தெரியும் என்றான் ஜோ. ஆகவே எங்கள் இருவருக்கும் பொதுவான எதிரிகளை பற்றி கதைத்து நேரத்தினை கழிப்பதாக முடிவு செய்தோம். எங்களுக்கு கட்டளையிடும் அதிகாரம் படைத்த வெள்ளைக்காரன் டானியலை பற்றி கதைத்தால் ஜோவுக்கு உற்சாகம் பொத்துகொண்டு வரும். இங்க்லிஷில் தெரிந்த "உதவாக்கரை", "உருப்படாத பயல்" போன்ற வார்த்தைகளுக்கு சமனான ஆங்கில வார்த்தைகளால் அவன் வேலையில் செய்யும் பித்தலாட்டங்களை பற்றி கதைத்து மகிழ்ந்தோம். நீண்டதூரம் நடக்கும் போது உடல் சூடேறுவதால், ஆஸ்திரேலியா Winter ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. .

அந்நேரம் Carbon Tax எனப்படும் சமாச்சாரம் அவுஸ்திரேலியா மீடியாக்களில் கடல் வழியான குடியேற்றம் பற்றிய செய்திகளையும் முந்திக்கொண்டது. ஒவ்வொரு Companyயும் தாமாக வெளியேற்றும் CO2 அளவுக்கேற்றவாறு வரி கட்டவேண்டுமேன்பதுதான் இந்த Carbon Tax வரிவிதிப்பு. ஆகவே இதன்மூலம் கம்பனிகள் சூழலுக்கு வெளியேற்றும் CO2 அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும் அல்லது கடுமையான வரியை அரசாங்கத்துக்கு கட்டவேண்டும். இந்த வரிப்பணத்தை வைத்து அரசாங்கம் சூழழில் அதிகரிக்கும் CO2வின் அளவை குறைக்கும் செயற்திட்டங்களுக்கு பயன்படுத்த இருப்பதாக செய்திகள் வந்தன. எங்கள் அலுவலகத்திலும் இதுபற்றிய கடுமையான விவாதங்கள் நடந்தன.

சில்வெஸ்டர் கொஞ்சம் சீரியசான ஆசாமி. நாலு பேரை இழுத்து வைத்துக்கொண்டு ஒரு கையில் ஆவி பறக்கும் Coffee Mugக்குடன் Carbon Tax பற்றிய சீரியஸாக ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்தான். இனி பொருட்களின் விலைகள் வானத்தை எட்டும் என்பது அவனது விவாதமாக இருந்தது. இந்நேரத்திலே சிகரெட் Breakஇற்காக வெளியே சென்று வந்த கமேரன் அவ்வழியாக வந்தான். அவனது மூச்சுகாற்றில் இருந்த சிகரெட் வாசனை அங்கிருந்த எல்லோரையும் தாக்கியது. சில்வெஸ்டர் உடனடியாக "உதாரணமாக கமேரன் போன்ற நபர்களுக்கும் Carbon Tax கட்டாயமாக்கப்படவேண்டும். சிகரெட் மூலமாக CO2இனை வெளியேற்றும் இந்த படுபாவிகளும் கூடுதலாக Carbon Tax கட்ட வேண்டும்" என்று சாதாரணமாக சொல்ல எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். அது போதாது என்று அது பற்றிய email ஒன்றையும் எல்லோருக்கும் தட்டி விட்டான்.

ஒவ்வொரு நாளும், மதிய உணவு முடிந்த பின்னரும் Table Tennis விளையாடுவோம். எங்கள் அலுவலகத்தில் மொத்தமாக நூறு பேர் வேலை செய்தாலும், பத்து பேர் மாத்திரமே இருக்கிற IT Departmentகாரனுகள்தான் மட்டும்தான் விளையாட்டில் இறங்குவோம். சைனாக்காரன் "சான் லீ"தான் எங்களுக்கு குரு. பத்தரை மணிக்கு வேலைக்கு வந்தாலும் Lunch Time ஒரு மணிக்கு Racketஉம் கையுமாக ஆஜராகி விடுவான். எனக்கு சுமாராகவே விளையாட வருவதால் லேசில் என்னை சேர்க்கமாட்டான்கள். மெக்ஸிகோக்காரன் ஆல்பி மட்டும்தான் என்னோடு போட்டிக்கு வருவான். என்னோடு விளையாடினால் மட்டும்தான் அவனுக்கு வெற்றி பெற வாய்ப்பிருப்பதால் இப்படி ஒரு கருணை. Doubles விளையாட ஆள் பற்றாது என்றால் மட்டுமே என்னை கூப்பிடுவான்கள். "சிங்"கும், ஈரானியன் அப்துல்லும் ஒருவித வெறியுடனே விளையாடுவார்கள். Lunch Time முடிந்தபின்னரும் நேரம் போவது தெரியாமல் Table Tennis விளையாடுவான்கள். Office மூடும்வரை மாலை நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க விளையாடாவிட்டால் அந்த நாளே வேஸ்ட் என்று "சான் லீ" அடிக்கடி கூறுவான்.

ஆஸ்திரேலியாவில் என்னுடன் பல்கலைகழகத்தில் படித்த நண்பர்கள் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த பெரிய தேசத்தில் அவர்களது ஒரே contact, email மட்டும்தான். அடுத்த சனிக்கிழமை சந்திக்க முடியுமா என்று கேட்டு ஒரு email அனுப்பினேன். "அடிசக்கை! நீயெல்லாம் Sydneyக்கு வந்திட்டியா.. இனிமே மழை பொய்ச்சுடும்" என்பது போன்ற கனிவான வரவேற்புகள். "எப்படி இருக்கு Sydney" என்று ஸ்மித் கேட்டான். "இதுவரைக்கும் சும்மா பரவாயில்லையில்லடா மச்சான்! கொஞ்சம் விரிவா சொல்லனும்னா நான் Sydney பயணம் பற்றி எழுதின Blogஐ வாசிச்சு பார்.. என்று சைக்கிள் Gapல ஈயடிக்க ஆளில்லாத என்னுடைய Blogஐ market பண்ணினேன். emailஇல் பிளான் பண்ணின மாதிரி ஒரு சனிக்கிழமை நண்பன் மோர்கன் தங்கியிருந்த வீட்டுக்கு போனேன்.

எனது நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஆளுக்கொரு இங்கிலீஷ் பெயர் வச்சுக்கூப்பிடுவார்கள். ஆகவே **கன் என்ற பெயர் மோர்கன் என்று மாற்றம் பெற்றது. மோர்கனின் வீட்டு சாமான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரைந்து கிடந்தன. "என்னடா மச்சான்! campus hostel மாதிரியே ரொம்ப cleanஆ இருக்கு" என்று சிரித்தேன். இதனால் கடுப்படைந்த மோர்கன்  "டேய் இதைப்பத்தி உன்னோட இழவு Blogல ஒரு வார்த்தை எழுதினா Friendship Cut" என்று எச்சரிக்கை விடுத்தான். பேச்சை மாற்ற "வேலை எங்கடா மச்சான்" என்று கேட்டு வைத்தேன். "ஒரு மணித்தியாலம் Trainஇல போகணும்டா. ஆனா இந்த ஏரியாவில முழுக்க தமிழ் சாப்பாட்டுக்கடை நிறைய இருக்குது. அதனால இங்கேயே குடியேறிட்டன். சமைச்சு கஷ்டப்படதேவையில்ல பாரு.." என்றான்.


நாங்களிருவரும் மிஞ்ஜன் என்கிற இன்னொரு நண்பனுடன் இணைந்து ஒரு Lunchஇற்கு போவதாக பிளான். மணி ஒன்றானது. இன்னும் மிஞ்சனை காணவில்லை. எல்லாத்தையும் நேரத்துக்கு செய்து பழகிய மோர்கன் பொறுமையிழந்து மூன்றாம் தடவையாக போன் செய்தான். "டேய்! எங்கடா இருக்கிறே.. மணி இரண்டாக போகுது. நான் காலையிலே சாப்பிடலைடா" என்று அழாக்குறையாக சொன்னான். "கொஞ்சம் இருடா இன்னும் இரண்டு நிமிஷம்தான்" என்று மிஞ்ஜன் கெஞ்சினான். மோர்கன் கொஞ்சம் வெள்ளைக்காரன் மாதிரித்தான். எல்லாமே நேரத்துக்கு நடக்கணும். கடவுள் உலக Mapஐ சரியாக பார்க்காமல் செய்த தவறினால் இலங்கையில் பிறந்தவன். Jaffna St.Johnsஇலே படித்தவன். ஆகவே அப்போதே இங்கிலீஷ் நல்லா கதைப்பான். ஆனால் என்னதான் நல்லா இங்கிலீஷ் கதைச்சாலும் அதனை பிகர்களை மடிக்க பாவிக்காத நேர்மையாளன். "இவன் இப்ப Sydneyஇல் வாங்கும் சம்பளத்தை நீ retire பண்ணும் காலத்தில கூட வாங்க மாட்டே" என்று சாம்சன் எப்போதுமே என்னிடம் சொல்லுவான். ஆனாலும் அவனது sydney Apartment எங்களது Campus Hostelலை விட கொஞ்சமே மேம்பட்ட நிலையிலிருந்தது.

மிஞ்சன் ஒருமாதிரியா இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தான். "எப்படிடா இருக்கே.. அப்ப பார்த்த மாதிரியே இருக்கே.... Unbelievable" என்றான் மிஞ்ஜன். மோர்கன் வீட்டிலிருந்து 45 நிமிஷம் வேகமான கார் பயண தொலைவிலிருக்கும் ஜாக் & ராஷ் வீட்டுக்கு போனோம். எங்களுக்காக இருவரும் சமையல் செய்திருந்தார்கள். Bachelor சமையல் என்றாலும் நான்கு கறிவகைகளும் மூன்று பொரியலுமாக விருந்து களைகட்டியது. விருந்து முடிந்தபின்னர் பின்னேரம் எங்கே போவது என்ற விவாதம் தொடங்கியது.

படம் போரடிக்கும் என்றார்கள். கிரிக்கெட் விளையாட முடியாத அளவுக்கு நிறைய சாப்பிட்டு விட்டோம். ஜாக் "வாங்கடா எல்லோரும் Bush Walk போவோம்" என்றான். சொல்லும்போதே அவன் கண்கள் ஒருவித பரவசநிலையிலிருந்தன. "அது என்னடா BushWalk.. அப்படி என்றால் என்னடா மச்சான்" என்று கேட்டேன். அவுஸ்திரேலியா ஒரு புதர்க்காடுகளை கொண்ட வறண்ட தேசம்.. அவுஸ்திரேலியன்களின் முதல் முக்கிய பொழுதுபோக்கே அந்த புதர்களினூடாக நீண்ட தூரம் ஜாலியாக நடைபோடுவதுதான். அதுதாண்டா மச்சான் BushWalk என்றான் ஜாக். ஜாக் இலங்கையில் Campusஇல் படிக்கும்போது அவனுக்கு படிப்பது மட்டுமே அவனது ஒரே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. Campusஇல் சொல்லிக்கொடுக்கும் படிப்பு பற்றாது என்று CIMA, BCS போன்ற இதர Courseகளில் சேர்ந்து படித்து இந்த பிறவிப்பயனை அடைந்தவன். ஆனால் இப்போது Bushwalk என்றதொரு அந்நியமான பொழுதுபோக்கு அவனது TopTenஇல் முதலிடத்தில் இருந்தது.


Manly Beachக்கு பக்கத்தில் இருக்கும் Walkwayஇல் போவதாக இருந்தோம். ஜாக்தான் காரை ஓட்டினான். ஒருவித வெறியுடனே வேகமாக போய் சேர வேண்டும் என்று ஓட்டினான். போய் சேர்ந்ததும் எல்லோரும் beach மணலில் நடந்து பழங்கதை பேசினோம். மோர்கன் கையில் camera இருந்தது. சூரியன் மறையும் மாலைக்காட்சியை எப்படியாவது அழகாக எடுக்க வேண்டுமென்றான். ராஷ் மற்றவர்களை கலாய்ப்பதில் வல்லவன். மோர்கன் சொல்லும் ஒவ்வொரு வசனத்துக்கும் ஏதாவது சொல்லுவான். "மச்சான் நீ மோர்கனை பத்தி Blog எழுதுடா.. நான் உனக்கு நல்லா நாலு points எடுத்துத்தாறேன்" என்றான். Walkway சில இடங்களில் அழகாக இருந்தது. படிகள் சில இடங்களில் கட்டப்பட்டிருந்தன. பல இடங்கள் பாறைகளும் . உயரமான பாறை மேல் ஏறி கடலின் அழகை ரசித்தோம்.

மோர்கன் பரந்த மேகங்களை  Cameraவுக்குள் அடக்க முயற்சித்தான். ஒரு இடத்தில் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பதுங்கியிருந்து துப்பாக்கி சுடும் தளத்தை (Gun Pit) பார்க்கக்கூடியதாக இருந்தது. வேகமாக நடந்ததால் குளிர் தெரியவில்லை. சூரியன் மறைய பத்து நிமிடங்களே இருந்ததால் வந்த பாதையிலே காரை நோக்கி நடந்தோம். "மச்சான் இங்க பாருங்கடா கார் parking ticket எடுக்க மறந்து விட்டோம். அநேகமாக Fine போட்டிருப்பானுங்க" என்றான் ஜாக். உண்மைதான் காரின் முன்புறத்தில் 100 டொலர் Fine Receipt வைக்கப்பட்டிருந்தது. "எல்லோரும் மறந்து தொலைச்சீங்க.. ஆளுக்கு 33 டொலர் கட்டுங்க" என்று சொல்லியவாறே மோர்கன் காரை எடுத்தான். இப்படித்தான் முக்கிய இடங்களில் parking டிக்கெட் எடுக்காமல் park பண்ணினால் fine அடித்து விடுவான்கள்.

இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நாளும் ஒருவாறாக வந்து விட்டது. இந்த நாள் எப்போது வரும் என்று இருந்த எதிர்பார்ப்பு இப்போது இல்லை. மனம் வெறுமையாக இருந்தது. கிட்டத்தட்ட இருபது மணித்தியால பிரயாணம் முடிந்த பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டினை வந்தடைந்தேன். மெதுவாக நடந்து எனது ரூமுக்கு போனேன். காமிக்ஸ்கள் மேசையில் கொட்டிக்கிடந்தன. மூன்று மாதங்களின் பின்னர் காமிக்சை கண்டேன். கையில் அகப்பட்ட ஒரு காமிக்சை எடுத்துக்கொண்டு படுக்கையில் விழுந்தேன். அதன் தலைப்பு "நரகத்தின் நடுவில்"..

Wednesday, July 25, 2012

இது ஒரு குளிர் காலம்!


உல்லாச பறவைகளாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தோம். மறைக்கப்படாத ஒரே இடமான முகத்தில் குளிர் காற்று அடித்தது. வெளியே பெய்த மழையில் கார் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் கைகளை உரசி சூடேற்றினோம். துருவா வேகமாக ஓடிப்போய் டிரைவர் சீட்டில் இடம் பிடித்து முதல் வேலையாக எஞ்சினை ஸ்டார்ட் செய்து ACயை போட்டான். "கதவை பூட்டுங்கடா.. குளிர் வரப்போகுது" என்றான். அவன் ஒருத்தனுக்குத்தான் கார் ஓட்டத்தெரியும். ஆகவே அவனின் கட்டளையை மதித்தோம். ஜோ எப்போதுமே முன் சீட்டில்தான் இருப்பான். துருவாவின் டிரைவிங்க்கு பின் சீட்டுதான் எனக்கு பாதுகாப்பு. அவன் எப்போவுமே திடீர் என்று வேகமா எடுப்பான், ஸ்பீட்லிமிட் அறிவிப்பினை பார்த்தவுடன் ப்ரேக் போட்டு வேகத்தினை குறைப்பான். அம்பது மீட்டருக்கு ஒருக்கா எது எதற்கோ ப்ரேக் போடுவான். நல்லவேளை சீட் பெல்ட் புண்ணியத்தால் எங்கள் பற்கள் பாதுகாக்கப்பட்டன. இவனுடன் ரெண்டு நாள் காரில் போனாலே மூன்றாம் நாள் காரில் போய் விபத்து ஏற்படுவது போல கனவு வரும். ஆனாலும் இந்த குளிரில் Train ஏறி நீண்ட நேரம் நடுநடுங்கி Apartment போய் சேர்வதை விட கார் அக்சிடென்டில் ஒரு வினாடியில் நரகம் போய் சேரலாம் என்பது நல்ல டீலாகவே இருந்தது. 

"இன்னிக்கு வேலை எப்படிடா மச்சான்" என்று பின்னேரத்துக்குரிய வழமையான கேள்வியை ஜோ தொடங்கினான். அவனுக ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது. ஆகவே வேலை நேரம் மட்டுமில்லாமல் எப்போதுமே இங்கிலிஷ்தான். ஆகவே மச்சான் என்பதை Dude என்றோ Mate என்று நாங்கள் பேசிக்கொண்டதாக நினைத்துகொள்ளுங்கள்:). "சைனாக்காரன் எல்லா வேலையையும் என்ட பக்கம் தள்ளுறாண்டா.. அவன் கதைக்கிற இங்கிலிஷும் புரியல.. அவன் எழுதின codeஉம் புரியல" என்று ஜோ தனது வழமையான பல்லவியை தொடங்கினான். "எனக்கு பரவாயில்லைடா மச்சான்! அந்த வெள்ளைக்காரன் சில்வெஸ்டருடன்தான் நாலு நாளா வேலை.. அவன் தெய்வம்டா.. ஒண்ணுமே கேட்க மாட்டான்.. ஒரு Deadline இல்லை.. முடிச்சிட்டியா என்று ஒரு கேள்வி கேட்க மாட்டான்.. நான் என்ர பாட்டுக்கு ஜாலியா code பண்ணிட்டிருப்பேன்" என்று சத்தமாக சிரித்தான்.

என்னுடைய நிலைமை இவனுகளைவிட கொஞ்சம் மோசம். இவ்வளவு நாளா ஜாலியா வீட்டை அம்மா சமைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டு ஒன்பதரை மணிக்கு வேலைக்கு போய் கொண்டிருந்த எனக்கு ஆஸ்திரேலியா விண்டர் குளிரில் ஆறு மணிக்கு எழும்பி எனக்கான உணவை நானே தயாரித்து எட்டு மணிக்கே நடுநடுங்கும் குளிரில் வேலைக்கு போக வேண்டிய தூரதிஷ்டத்தினை நொந்து கொண்டேன். வேலைக்கு போனால் காலை ஒன்பது மணிக்கே தூக்கம் வந்து விடும். இலங்கையில் அப்போது நாலரை மணிதானே. இப்படித்தான் ஒருநாள் அரைத்தூக்கத்தில் இமை கண்ணை மூடும்போது Hi Mate! how do u do! என்று என் தூக்கத்துக்கு இடைஞ்சலாக ஒரு குரல். அது கெவின். பாவிப்பயல் நான் தூங்கி வழிவதை பார்த்திருப்பானோ. இந்த கெவின் புதிதாக வந்த பயல். வயதோ முப்பதுகளின் நடுவிலிருக்கும். அவனது computer wallpaperஇல் கிருஷ்ணர் ராதா படமிருக்கும். கேட்டால் தான் ஒரு இந்து என்பான். அவனது இந்திய மனைவியை மணந்த பின்னர் இந்துவாக மாறியதாக கூறினான். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வட இந்திய snacksஐ கொரித்துக்கொண்டிருப்பான். புது இடத்தில் வேலை செய்ய திணறிக்கொண்டிருந்த எனக்கு உதவிகள் செய்தான். போன வருடம் இந்தியா போனபோது ஆதவற்றோர் இல்லங்ககளுக்கு சென்று உதவி செய்ததாக சொன்னான். என்னையும் ஒரு ஆதவற்றவனாக கருதி நான் install பண்ண தடுமாறிக்கொண்டிருந்த Applicationஐ எனது Laptopஇல் Setup பண்ண உதவினான். இவன் வியாழக்கிழமை காலை ஏழு மணிக்கு அங்கு வேலைக்கு நேரத்தோடு வரும் எல்லோருக்கும் யோகா சொல்லிக்கொடுத்தான்.

எங்களுக்கு ஒரு அபார்ட்மென்ட் தரப்பட்டிருந்தது. நாங்களே சமைக்க வேண்டும். வீட்டில் அம்மா ஒளித்து வைத்த மிக்சர், பிஸ்கட் திருட மட்டுமே சமையலறைக்கு சென்றிருக்கிறேன். எங்களில் "ஜோ"தான் தைரியசாலி. கண் எரிந்தாலும் இரண்டு வெங்காயத்தை இரண்டு நிமிசத்தில் நறுக்கிவிடுவான். ஆகவே ஜோதான் சமையலை தலைமையேற்று நடத்துவான். எனக்கு காரட், தக்காளி வெட்டுற மிக முக்கிய பொறுப்பு. ஜோ ஏதாவது ஒரு கறியை தத்து பித்து என்று வைத்து விட்டு "சாப்பிடுறா மச்சான்! இன்னிக்கு கறி சூப்பர்" என்பான். நானும் நாக்கில் படாமல் குடிகாரப்பயல்கள் சரக்கடிப்பது போல பட்டென்று விழுங்குவேன். நாக்கில் பட்டால் வாழ்க்கை வெறுத்துவிடும். நாங்கள் செய்யும் மத்தியான உணவு நால்லாயிருக்குமோ இல்லையோ வேலை செய்யும் இடத்தில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும் போது நடக்கும் சம்பாஷணை நன்றாக போகும். இப்படித்தான் ஒருநாள் எல்லோரும் கூடியிருந்த Lunch Roomஇல் எனது உணவின் முதல் கரண்டியை விழுங்கினேன். தொண்டை சும்மா எரிந்தது. ஆனாலும் உணவின் சுவையினால் நிறுத்தாமல் சாப்பிட்டேன். துருவாவுக்கு காரம் பிடிக்கும் ஆகவே கறிக்குள் மிளகாய் தூளை கண்ட மேனிக்கு கொட்டுவான். எனக்கு கண்ணால் கண்ணீரும் வழிந்தது. ஜோ மூக்கை உறிஞ்சிக்கொண்டு சாப்பிட்டான். இதைப்பார்த்து அல்பிரடோ சிரித்தான்.

அல்பிறேடோ மெக்ஸிகோக்காரன். வயது சுமார் அம்பது இருக்கும். எல்லோரும் அவனை ஆல்பி என்றுதான் கூப்பிடுவார்களாம். எங்களையும் மனுசனுகள் மதித்து நட்பாக கதைப்பவர்களில் அவனும் ஒருவன். அவன் சொல்லும் ஜோக்கை விட அவன்  கொண்டு வரும் உணவுகள் பார்க்க அழகாக இருக்கும். எங்களுக்கும் தரமாட்டானா என்றிருக்கும். "அவ்வளவு உறைப்பாகவா இருக்கு" என்று எங்கள் கறியில் கொஞ்சம் சுவைத்தான். "இதெல்லாம் ஒரு காரமா? நாங்கள் மெக்ஸிகோவில் இதைமாதிரி பத்து மடங்கு காரம் சாப்பிடுவோம்" என்றான். உலகிலேயே நாங்கள்தான் அதிக காரம் சாப்பிடுவோம் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். "பத்து வருசத்துக்கு முன்னாலே மெக்ஸிகோவிலிருந்து என்னை பார்க்க வந்த எனது மாமா நாலு பக்கெட் மெக்ஸிகன் மிளகாய் கொண்டு வந்தார் ஆஸ்திரேலிய Customs பயல்கள் அதை பறித்து விட்டான்கள். ஆனாலும் கோட் pocketஇல் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மிளகாய் பாக்கெட்டை எனக்கு தந்து ஆச்சர்யப்படுத்தினார்" என்று மிளகாய்க்கும் அவனுக்குமான உறவுக்கு சுர்ரென்ன்று ஒரு உதாரணம் சொன்னான். ஜெய் சிங் சீக்கிய இனத்தவன். அவனுக்கு இந்த கதை கேட்டே நாக்கில் உறைப்பது போன்று உஷ்.. உஷ்.. என்று சப்புகொட்டினான். அவனுக்கு மிளகாய் என்றாலே அலர்ஜியாம். சிறுவயதில் இருந்தே ஆஸ்திரேலியாவில் வாழ்ந்ததால் எப்போதும் உப்புசப்பில்லாத பேர்கர் பன்தான் அவனது தேசிய உணவு.

காலையில் எழுந்து பற்கள் கட.. கட,, என்று அடித்துக்கொண்டிருக்க வேலைக்கு போவது கடினமாக இருந்தாலும் அந்த குளிர் எனக்கு பிடித்திருந்தது. இதுவரை காலமும் சிகரெட் பிடித்திராத எனது வாயிலிருந்தும் புகை வந்தது. என்னதான் குளிராக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் சிவனே என்று எட்டரை மணிக்கே வேலைக்கு ஆஜராகி விடுவோம். ஆனால் எனக்கு பக்கத்தில் இருக்கும் சைனாக்காரன் பத்து மணிக்கு ஜாலியா வந்திறங்குவான். குட் மோர்னிங் சொன்னாலும் பதிலுக்கு ஏதாவது வாய்க்குள்ளே சொல்லுவான். இதுவரை காலமும் தமிழை அப்படி இங்க்லிஷில் வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றி கதைக்கும் சீவன் நான் ஒருவன்தான் என்று எண்ணியிருந்தேன். ஆனால் இந்த சைனாக்காரன் எழுத்துக்கு எழுத்து சைனிஸ் மொழியை இங்கிலீஷ் வார்த்தைகளாக மாற்றி கதைத்தான். அவன் சொன்ன ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க அஞ்சாறு நாட்கள் எடுத்தது. அவனோடு ஒரு Projectஇல் வேலை செய்த போது ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமாக இருந்தது. அவன் மனதுக்குள் ஒரு Designஐ போடுவான். அதற்கேற்றவாறு எனக்கு Taskக்குகளை எனக்கு வழங்கினான். ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்றோ Design பற்றியோ சொல்ல மாட்டான். அதை பற்றி அவனிடம் கேட்டால் சம்பந்தமில்லாமல் ஏதாவது சொல்லுவான். இதைதான் Software சொல்வளத்தில் Collyer brothers Syndrom என்பார்கள். Collyer brothers பற்றிய கதை பரிதாபமான சுவாரசியமான சகோதரர்களின் வாழ்க்கை. அவர்களை போலவே மனக்கதவை இறுக்கமூடி சரியாக communicate பண்ண மறுக்கும் Developerஐ இந்த பெயரின் மூலம்தான் அழைப்பார்கள்.

இலங்கையில் எனது அலுவலகம் காமா சோமாவேன்று அமைதியாக இருக்கும். யாராவது சத்தமாக கதைத்தாலும் எல்லோர் கண்ணும் அவர்களை கடுமையாக நோக்கும். ஆனால் இந்த அலுவலகத்தில் சத்தத்துக்கு பஞ்சமிருக்காது. வந்த முதல் நாள் எனது இருக்கையில் முன்னால் டக்.. டக்.. என்று ஆணி அடிப்பது போலான சத்தம் கேட்டது. அலுவலக நேரத்தில் யாராது ஆணி அடிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தால் எனக்கு முன்னால் இருந்த "கமேரன் வைட்" சத்தமாக காலை தட்டியவாறே Headphoneஇல் அதிரடியான பாடலை ரசித்துக்கொண்டு வேலையிலாழ்ந்திருந்தான். பாடலின் Beat அதிகமாக அவனது கால்களினால் ஏற்படுத்தும் ஓசையும் அதிகமானது. திடீரென்று Oh! Come on.. You can't do this to me.. என்று computer screenஐ பார்த்துக்கெஞ்சினான்.
அடப்பாவி இவன் ஆபீஸ் இவன் லவ்வருடன் Skype call கதைக்கிறான் போல என்று அவன்மேல் காண்டானேன். சிலவேளைகளில் S#!T, F^*& போன்ற இன்சொற்களால் அர்ச்சனை செய்தான். இவன் யாருடன்தான் ஒவ்வொரு நாளும் இப்படி கதைக்கிறான் என்று எனக்கு ஆர்வம் மேலிட மெதுவாக அவன் பின்னால் எதேச்சையாக செல்வது போல சென்று பார்த்தேன்.. பாவிப்பயல் Eclipse IDEஇல் PHP Codeஐ பார்த்துக்கொண்டு கதைத்துக்கொண்டிருந்தான். ஒரு Codeஐ எழுதிவிட்டு Test செய்யும்போது பிழைத்தால் Come on Dear என்றான். மீண்டும் ஒருமுறை பிழைத்தால் S#!T அடுத்த முறை பிழைத்தால் F^*& என்று வார்த்தைகளில் காராசாரத்தை கூட்டினான்.

ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் மனக்காலன்டரில் இன்னும் எத்தனை நாட்கள் இந்த உப்புசப்பில்லாத் (சிலநேரங்களில் உப்பு அதிகம்) உணவை சாப்பிட வேண்டுமோ என்று கணக்குப்பார்ப்பேன். எனக்கு அவங்கள் தந்திருக்கிறது மூன்று மாச விசா. இதுவரை முப்பது நாட்கள் முடிந்துவிட்டன என்று காலையில் சந்தோசப்பட்டேன். ஆனால் இரவு உணவை விழுங்கும்போது இன்னும் அறுபது நாட்கள் இருப்பதை எண்ணி வருந்தினேன். வேலை நாட்கள் அநியாயத்துக்கு போரடித்தாலும் வார இறுதி நாட்களில் சிட்னியில் ஏதாவது ஒரு தமிழ் நிகழ்வுக்காகவாது போய் வரக்கிடைக்கிறது. JK அண்ணா இரண்டு மாசத்துக்கு முதலே கம்பன் விழாவுக்காக சிட்னி வருவதாக சொல்லி விட்டார். இம்முறை அண்ணரும் சுழலும் சொற்போரில் பங்கேடுப்பதால் இம்முறை சிட்னி கம்பன் விழாவை காண ஆவலாக இருந்தேன். கொழும்பில் கம்பன் விழா நடந்தாலும் ஒரு நாளும் சென்றதில்லை, ஆகவே முதன்முறையாக நான் ஆஜர்.

நிகழ்வு நடந்த இடம் சிட்னி முருகன் கோயில். ஆகவே ஒன்பது மணிக்கு அங்கு சென்று எனது காலணியை கழற்றி கொண்டிருந்தபோது ஒரு பரிச்சயமான குரல்.. வேற யாரு JK அண்ணாதான். குர்தா போட்டு வேட்டி கட்டிக்கொண்டு வந்தார். காலில் இருந்த Sport Shoeதான் பொருத்தமில்லாமல் கொளுவப்பட்டிருப்பது போலிருந்தது. வழமையான புன்னகையுடன் "எப்படியிருக்கே" என்றார். நேரமாகி விட்டதால் அவசர அவசரமாக மண்டபத்துக்கு சென்றோம். போகும்போது வேட்டியை கொஞ்சம் தூக்கியவாறு நடந்தார். நான் விநோதமாக பார்க்க "தம்பி! நான் போட்டிருக்கிறது Nike Shoeடா. Jeans என்றா பரவாயில்லை. இந்த வேட்டி மறைக்குது" என்றார். அண்ணா Nike/Armani Brandகளுக்கு "அழையா" Brand Ambassadorஆக இன்னமும் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது. விழாவின் தொடக்கத்தில் பேசிய தமிழகத்தை சேர்ந்த பேச்சாளர்களின் பேச்சுகள் நகைச்சுவை + இலக்கியம் கலந்து செவிக்கு இனிமை சேர்த்தன. அதன்பிறகு நான் மிகவும் எதிர்பார்த்திருந்த சுழலும் சொற்போர் ஆரம்பித்தது. "டேய்! நான் என்ன கதைச்சாலும் நல்லா கையை தட்டுடா" என்று சொல்லிக்கொண்டே மேடையேறினார் அண்ணா. அதில் JK உட்பட மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றனர். முதலில் பேசிய சர்மா "தொண்டு" பற்றிய விளக்கத்தினை வலிமையான கம்பராமாயண பாடல்கள் சகிதம்  விளக்கினான். பின்பு பேசிய JK ஒருவித மென்மையான குரலில் ஆரம்பித்தாலும் பின்பு இயல்பாக பேச்சினால் தனது வாதத்தினை வைத்தார். அவரது தலைப்பு "தியாகம்". சமகால நிகழ்வுகளை கம்பரமயணத்துடன் வரிக்கு வரி இணைத்து வலிமையான விவாதங்களை முன்வைத்தார்.
இதுபோதாதென்று மற்றவர்களின் தலைப்புகளுக்கு எதிரான வாதத்தினை ஆணி அடித்ததை போல சொல்லி அமர்ந்தார்.

இவரின் இந்த தாக்குதலால் கோபமடைந்த மற்ற பேச்சாளர்களும் இவரை தாக்க தயங்கவில்லை. இவருக்கு பின்னால் பேசிய பெண் பேச்சாளர் இவருடைய பெயர் குமரன் என்பதால் இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம் என்ற விவாதத்துடன் தொடங்க சபையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அண்ணா ஒரு கல்யாணத்துக்கு கூட Invitation கூட அனுப்பாமல் இரண்டு ரகசிய கல்யாணம் முடித்துவிட்டாரா என்று நானும் சந்தேகப்பட்டேன். எல்லாம் முடிந்த பின்னர் "அண்ணே உங்களுக்கு ரெண்டு மனைவிகளா" என்று அவரை கேட்க "எனக்கே அவங்க ரெண்டு பேரும் யாருன்னு சத்தியமா தெரியலடா" என்றார்.

Sunday, May 6, 2012

யாழ் பயண கட்டுரை

நானும் தனுஷனும் வெள்ளிக்கிழமை நாலரை மணிக்கே அலுவலகத்தினை விட்டு கிளம்பி வீட்டுக்கு போனோம். தனுஷன் சரியா நேரத்துக்கு நிற்பேன் என்று சத்தியம் செய்து விட்டு வெள்ளவத்தையில் இறங்கினார். ஏழு மணிக்கு யாழ்பாணத்துக்கு பஸ் வெளிக்கிடும் என்றார்கள். இரண்டு நாளைக்கு தேவையான துணிகளை ஒரு பயணப்பைக்குள் திணித்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். அவசரஅவசரமாக இரவு சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக்கொண்டிருந்தபோது, போன் பாடல் இசைத்தது. வேற யாரு "மதுயிச" மதுதான் போன் பண்ணி பஸ்ஸுக்கு லேட்டாகிறது என்று சொல்லி கிலியை ஏற்படுத்தினார். "அம்மா! இவ்வளவு சாப்பிட்டதே போதும்.. பஸ் போகப்போகுது" என்று விடைபெற்றேன். சரியாக ஏழு மணிக்கே பஸ் ஏறுமிடத்தில் ஆஜரானேன். மதுவும், பாலா அண்ணனும்தான், சயந்தனும் காத்திருந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் ஏதோ பிக்னிக்கு போவதைபோல ஜாலியாக உடுத்தியிருந்தார்கள். ஆனால் வழமைபோல நான் மட்டும் சீரியஸா உடுத்தியதை எண்ணி வருந்தினேன். சயந்தனின் முகத்தில் கவலை ரேகைகளுடன், கோப ரேகையும் சேர்ந்திருந்தது. சரியான நேரத்தினை
இதுதாங்க மலாயன் கபே முன்புற தோற்றம்
கடுமையாக கடைப்பிடிக்கும் தனுஷன்(?) வழமை போலவே இன்றும் சொதப்பி விட்டார். அதுசரி, அவரை விட்டுட்டு கிளம்பலாம் என்றாலும் முடியாது. பயபுள்ள எல்லோருடைய டிக்கெட்டையும் வச்சிருந்தார். "இந்த மனுஷனை ஏழேழு ஜென்மத்துக்கும் திருத்த ஏலாது" என்று எங்களது வழமையான டயலாக்கை சொல்லி மனதுக்குள் திட்டிக்கொண்டோம். எங்களது நல்ல காலத்துக்கு பஸ் இன்னமும் வரவில்லை. சயந்தன் போனை எடுத்து கேட்ட போது "இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவேன்" என்றார். "அந்தாளு இப்பத்தான் பாத்ரூமிலிருந்து வெளியே வந்திருப்பார். ஆனால் இந்தா வந்து விடுவேன் என்று கதை விடுவார். இனி யாழ்பாணத்துக்கு போன மாதிரித்தான்" என்று **** சொன்னார். எல்லோருக்கும் தெரிந்த மொழிகளிலெல்லாம் கெட்ட  வார்த்தைகளை மனதில் சொல்லி ஆற்றிக்கொண்டிருந்த வேளையில் தனுஷன் வந்து சேர்ந்தார். ஆனால் பஸ் இன்னமும் வருவதாக இல்லை. தனுஷன் லேட்டா வந்ததற்கு ஒரு நம்பும்படியான காரணத்தினை இட்டுகட்டி சொன்னார். எல்லோரும் கேட்டு மனம் வருந்தினர். "பாவம் இந்த மனுஷனை அநியாயமா திட்டி தீர்த்தோமே" என்று மனம் வருந்தினர். பாவம் அவரை பற்றி எனக்கும் சயந்தனுக்கும் மட்டும்தான் தெரியும்.

பஸ் ஒன்றரை மணி நேரத்தின்பின் ஒருவாறாக வந்து ஏறிக்கொண்டோம். நானும் சயந்தனும் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்தோம். பாலா அண்ணனும், மதுவும் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்தார்கள். பாவம் தனுஷன் மட்டும் தனியா இருந்தார். சயந்தன் போகும்போதே தனது Presentation slides ஐ Laptopஇல் போட்டு காட்டினார். எல்லாமே அற்புதமான படங்கள் துணை கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. . இரவு பயணம் நல்ல நித்திரையுடன் கழிந்தது. யாழ்ப்பாண பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போதுதான் முழித்தேன். மதுவும் பாலா அண்ணனும் பின் சீட்டில் இருந்த தனுஷனின் குறட்டை சத்தத்தில் தூங்க முடியவில்லை என்று குறைப்பட்டனர்.

A1 தர உணவக சான்றிதழ்
தனுஷன் தனக்கு பக்கத்தில் இருந்தவர்தான் குறட்டை சத்தத்திற்கு காரணம் என்றார். இந்த சண்டையுடன் நடந்தபோது பிள்ளையார் இன்" ஹோட்டல் வந்துவிட்டது. பயணபைகளை அறையில் வைத்து விட்டு காலை உணவுக்காக நடந்தபோது "மலாயன் கபே" வந்தது. "A1 தர உணவு வழங்கப்படும்" என சான்றிதழை கடையின் முன்னுக்கு வைத்திருந்தார்கள். சயந்தன் கொழும்பிலுள்ள அடிமைத்தீவு A1 ஹோட்டலின் ஒரு கிளையாக இருக்கும் என்று சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தார். மற்றவர்கள் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் எதைக்கொடுத்தாலும் விழுங்கி ஏப்பம் விட ரெடியாக இருந்தனர். இடியப்பம் சொதி ஆர்டர் கொடுத்துவிட்டு சயந்தனுக்கும் A1 ஹோட்டலுக்குமான உறவினை பற்றி கதை திரும்பியது. "அவரும் A1 ஹோட்டலின் ஒரு டைரக்டர்" என்றேன். எல்லோரும் சிரிப்பானுகள் என்று எதிர்பார்த்தேன். அதையும் மது சீரியசாக "அட! அப்படியா.. சயந்தன் ரொம்ப பெரிய ஆள்தான்" என்றார். அதைக்கேட்டுத்தான் மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். "இவன் எதை சொன்னாலும் நம்பிடுவான்.. இவன் ரொம்ப நல்லவன்டா" என்று தனுஷன் சொல்ல மது புரியாமல் விழித்தார். ஒருவாறாக சாப்பாடு உள்ளே இறங்கியபின்னர்தான் எல்லோருக்கும் கண் சரியாக தெரிந்தது.

குளித்து விட்டு ஹோட்டல் அறையின் முன்னுக்கு இருந்த வாராந்தாவில் பிராக்டிஸ் ஆரம்பமானது. அரைகுறையாக இருந்த எனது slidesஐ முடிக்கும் வேலையில் மும்முரமானேன். மதுதான் நிகழ்ச்சி தொகுப்பாளர். புதுசு புதுசா ஐடியாக்களை போட்டு தனது பகுதிகளை மெருகேற்றினார். அவரது "முயலாமை" கதை எல்லோருக்கும் பிடித்துப்போக அதையும் நிகழ்ச்சியில் சேர்த்தோம். இதற்கிடையில் யாழ்பாணத்திலேயே நிலைகொண்டுள்ள எங்களது பிரதான ஒழுங்கமைப்பாளர் சர்வேஸ்வரன் அண்ணா வந்து சேர்ந்தார். ரூம் எப்படி வசதியா இருந்திச்சா என்று கவலையாக விசாரித்தார். சூப்பர் ரூம் book பண்ணியிருக்கிறீங்க என்ற பின்னர்தான் நிம்மதியானார். அவரது ஐடியாப்படி Appleஇன் "Think Different" வீடியோவை YIT சந்திப்பின் தொடக்கத்தில் போடுவதாக முடிவு செய்யப்பட்டது. "இவர்கள் வித்தியாசமானவர்கள்.. உலக கோட்பாட்டுடன் உடன்பட்டு வாழாதவர்கள்.. சதுர துளைகளில் உருளை ஆணிகள் போன்றவர்கள்" என்று சுத்த தமிழில் எழுதியிருந்தார். மது சின்ன வயசில நல்லா தேவாரம் பாடமாக்கியிருப்பார் போல, அந்த வசனத்தை ஒரே மூச்சில சொல்லி தனது தமிழ் பற்றை வெளிப்படுத்தினார். எல்லோருக்கும் பொறுப்புகள் சரியாக பகிர்ந்தளிக்கப்பட சந்திப்பு ஒத்திகை இனிதே நிறைவேறியது. சந்திப்பு இரண்டரை மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. மலாயன் கபே எல்லோருக்கும் பிடித்துப்போக அங்கேயே சாப்பிடுவதாக ஒருமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சாப்பிட்டு விட்டு சந்திப்பு நடப்பதாக இருந்த ஹாலுக்கு நடையை கட்டினோம். வழியை பிழையாக விளங்கிக்கொண்டு செக்கு மாடு சுற்றி வருவதுபோல சுற்றி வந்து ஒருவாறாக  இடத்தை அடைந்தோம். கங்காரு தேசத்திலிருந்து ஜேகே அண்ணர் skype video call மூலமாக இணைவதாக இருந்ததால் skype callஐ டெஸ்ட் செய்தோம். Light வெளிச்சத்துக்கு எதிராக அவர் உட்கார்ந்திருந்ததால் வீடியோவில் அவரது முகம் இருட்டாக இருந்தது. சந்திப்புக்கு வரப்போகிறவர்கள் அதைப்பார்த்து பயந்து விடாமல் இருக்க அதனை வெறும் Audio callஆக மாற்றினோம் :).
மது: தமிழ் எனக்கு தண்ணி பட்ட பாடு
இரண்டரை மணிக்கு எங்களுடன் சேர்த்து இருபது பேர்தான் இருந்தோம். ஆனால் சந்திப்பு தொடங்கி பத்து நிமிடத்துகுள்ளாக அரங்கம் நிறைந்தது. மது பிராக்டிசில் செய்ததை விட பல மடங்கு நன்றாக தொகுத்து வழங்கினார். அவரது கணீர் தமிழ் நிகழ்ச்சிக்கே உயிர் தந்தது. இரு மாணவர்களது Presentationகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவர்களது ஆங்கில உரைகள் அவர்களுக்கும் Computerஇற்குமான அறிமுகம் பற்றி சுவாரசியமாக போனது. அவர்களது உரையில் இருந்த தெளிவு JK அண்ணர் கொடுத்த mentoring இன் தரத்தினை வெளிக்காட்டியது. பின்னர் சயந்தனின் உரை தமிழில் ஆரம்பமானது. நான் இதுவரையில் "கொலவெறி" தனுஷ் இங்கிலிஷ்ல கதைச்சு பார்த்ததில்லை. அதுபோலவே சயந்தனையும் தமிழில் உரையாற்றி நான் ஒருநாளும் பார்த்ததில்லை. ஆனால் எதிர்பார்ப்பினை விட யாழ் IT Hub உருவான கதையை அழகாகவும் எளிமையான தமிழிலும் விளக்கினார். அவரது Presentation slideகளில் உள்ள படங்கள் அவரது கருத்துக்கு வலுவூட்டின.

இவ்வாறு சென்று கொண்டிருந்த நிகழ்வில் ஒரு அறிவுதிறன் கேள்வி-பதில் போட்டி ஆரம்பமானது. ஒவ்வொரு கேள்வி வாசிக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களில் மாணவர்களிடமிருந்து பதில்கள் சரமாரியாக வந்தன. அவற்றை சரிபார்த்து பரிசு வழங்கும் வேலையில் பாலா அண்ணனும், தனுஷனும் ஈடுபட்டனர். எனக்கு இவ்வாறான கேள்வி பதில்களே அலர்ஜிதான். எது பிழையான பதிலாக இருக்குமோ அதைத்தான் தெரிவு செய்து விடுவேன். என்ன செய்வது கடவுள் செய்த Manufacturing Defect. பாவம் பிழைத்து போகட்டும். ஆனால் மாணவர்கள் சும்மா பிளந்து கட்டினார்கள். கடைசியாக நான் கலந்து கொண்ட Cloud computing சம்பந்தமான கலந்துரையாடல் ஆரம்பமானது. நான் Cloud computing பற்றிய எளிய அறிமுகத்தினை தமிழ் Presentation மூலமாக வழங்கினேன். Technical சம்பந்தமாக எதுவுமே இல்லாமல் மிக எளிமையான அறிமுகங்களை போட்டு Comics பாணியில் Presentation slides ஐ அமைத்திருந்தேன். எல்லோரும் எதோ விளங்கியது போல தலையாட்டினார்கள். நல்லவேளை ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. அதன்பின்னர் ஜேகே அண்ணனும், டொக்டர் சார்லசும் எளிமையான தமிழ் மூலம் விளக்கத்தினை கொடுத்தார்கள். ஜேகே Cloud Computing தொடங்கிய வரலாற்றினை சுவைபட கூறினார். இந்த கலந்துரையாடலுக்கு உதயா அண்ணன் அமெரிக்காவிலிருந்து இணைவதாக இருந்தது. அவருடைய நேரம் காலை நான்கு மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் அவரை Onlineஇல் காணப்படவில்லை. அண்ணர் அப்படியே நித்திரைக்கு போய் விட்டாரோ என்று யோசித்தோம் :). ஆனால் பின்னர் விசாரித்தபோதுதான் அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக இண்டர்நெட்டும் இல்லாமல் மின்சாரமும் இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக பதுங்கியிருந்ததாக சொன்னார்.

இந்த லிங்கை கிளிக் பண்ணி Yarl IT Hub சந்திப்பின் youtube வீடியோக்களை பாருங்கள்.

இந்த Yarl IT Hub சந்திப்பு நடந்தது மார்ச் 3ஆம் திகதி. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சயந்தன் அடுத்த சந்திப்பு இந்த மாதம் 17ஆம் திகதி என்றார். நீங்களும் வாங்களேன்.