Saturday, December 24, 2011

குளிர்கால கதைகள் - பிளாட்ரோ

வீடு முழுக்க இருள் கவிந்திருந்தது. ஆனால் காலை பத்து மணியாகி விட்டது. ஆனால் இருளை விரட்டியடிக்க போதுமான சூரிய ஒளி இன்னும் வரவில்லை. இன்று முழுக்கவே சூரிய ஒளி வராது போகலாம். அவ்வளவு கடுமையான பனிப்பொழிவு. தியோ இழுத்து போர்த்துத்கொண்டு சுகமாக தூங்கினான். உள்ளே வந்த அம்மா அந்த அறையின் மேஜையிலிருந்த விளக்கினை பற்ற வைத்தாள் அறையின் ஐம்பது சதவீத பகுதியை அந்த வெளிச்சம் ஆக்கிரமித்தது. அம்மா "தியோ! தியோ! எழுந்திரு.. எழுந்திருடா.. டாடி உன்னை எழுப்பி கூட்டி வரச்சொன்னருடா" என்றாள். செல்லமாக அவனது முதுகில் தட்டியவாறு எழுப்ப முயன்றாள். சிறிது நேர கெஞ்சலுக்கு பிறகு எழுந்தான் தியோ. தியோவுக்கு இந்த வருட கிறிஸ்துமஸுடன் வயது பன்னிரண்டாகிறது. அம்மா அண்ணாவை எழுப்புவதை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த அவனது செல்ல தங்கை சிரில்லா, ஒன்றுமே தெரியாதது போல் திரும்பி படுத்துக்கொண்டாள். "அம்மா! அப்பாக்கிட்ட இவளை கூட்டிட்டு போகச்சொல்லுங்க.. நான் மட்டும் இந்த பனிக்குளிருக்குள் வெளியே போகணுமா!" என்று சீறினான் தியோ. "டேய்! நீதாண்டா ஆம்பிளை.. நீதான் அப்பாவுக்கு உதவியா இருக்கணும். சிரில்லா எனக்கு வீட்டு வேலைகளுக்கு உதவுவாள்.. எழும்பி வாடா அப்பாவுக்கு கோபம் வரப்போறது" என்றாள். அம்மாவுக்கு பின்னால், கண்ணை கசக்கிக்கொண்டே மெதுவாக காலை தரையில் உரசியவாறே முன்னறைக்கு வந்தான் தியோ. அவனது அப்பா ரொபின்சன் அறைக்கு வெப்பம் விநியோகிக்கும் அடுப்புக்கு பக்கத்தில் இருந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அவரது வாயில் சுங்கான் புகைந்து கொண்டிருந்தது. அதனை நன்கு அனுபவித்தவாறு புகையை பொறுமையாக வெளியேற்றி கொண்டிருந்தார். ஆனால் அவரது சிந்தனை கடுமையாக இருந்தது. இந்த சீசன் கடுமையான பனி. உணவு பொருட்களை தேடிக்கொள்வதில் இருக்கும் கஷ்டம் சொல்லி மாளாது. போதாக்குறைக்கு
செவ்விந்தியர்களின் தாக்குதல் பயம் வேறு. இப்போது வெள்ளை இராணுவத்தினர் அவர்களின் இனத்தவருக்கு செய்யும் அநியாயங்களுக்கு பதிலடியாக எப்போதாவது வெள்ளையரின் தனித்திருக்கும் குடியிருப்புகளில் தாக்குதல் நடத்துவார்கள். ரொபின்சன் மரம் வெட்டும் தொழில் பார்ப்பவர். இதனால் காட்டுக்கு பக்கத்தில் இருந்த மரத்தொழிற்சாலைக்கு பக்கத்திலே தனது வீட்டினை அமைத்திருந்தார். காட்டுக்குள் உள்ள மான், மரை போன்ற மிருகங்களை வேட்டையாடி உணவினை பெற்றுக்கொள்ள முடிந்தது. கோடைக்காலப்பகுதிகளில் பக்கத்தில் உள்ள ஒரு சில கிராமங்களுக்கு சென்று வர முடிந்தது. கடுமையான பனி காலங்களில் வேலைக்கு கூட வெளியில் செல்ல முடியாது. ஆனால் வீட்டின் வெப்பநிலையை பேண விறகுகள் இல்லாவிட்டால் குளிரில்தான் வாடவேண்டும். அதற்காகத்தான் இப்போது வெளியே செல்லவேண்டியுள்ளது.

தியோவும், ரொபின்சனும் இரண்டு கிலோமீட்டருக்கு போய் விறகு சேகரித்து முடிக்கும்போது பனி கடுமையானது. சூரிய வெளிச்சம் குறைய தொடங்கி விட்டது. வீட்டினை நோக்கி முடிந்தளவு வேகமாக நடந்தனர். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வாயை திறந்தாலே குளிர் உடம்புக்குள் போய் விடும். வீட்டில் இருக்கும்போதே தந்தை இருக்கும்பக்கமே தலைகாட்டமாட்டான். ஆகவே அவருடன் பேசிக்கொள்ள அவனுக்கு எதுவும் இருக்கப்போவதில்லை. வீட்டினை நெருங்கும்போது கறுப்பாக உடையணிந்த ஒரு உருவம் முன்னே செல்வதைக்கண்டனர். இவ்வளவு நேரமாக அந்த உருவம் கண்ணில் படவேயில்லை. அது ஒரு மனிதன்தான். முதுகில் ஒரு மூட்டையை சுமந்தவாறு மிக மெதுவாக நடந்து சென்றான். கடந்த இரு மாதங்களாக தியோ ஒரு வேற்று மனிதரையும் கண்டதேயில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் விழுந்து விடுவான் போலிருந்தது. ரொபின்சன் மிக வேகமாக போய் அவனை முன்னால் போய் நின்றார். சைகையால் நட்புடன் வந்திருப்பதாக உணர்த்தினார். கண்களை தவிர மற்ற பாகங்கள் முரட்டு துணியால் மூடப்பட்டிருந்தது. அவர் எதாவது சொன்னாலும் சத்தம் வெளியே வருமா.. என்று சந்தேகமாக இருந்தது. அவரது கழுத்தில் மேரி மாதாவின் உருவம் உள்ள சங்கிலி தொங்கியது. உடலில் எந்த சக்தியும் இருக்கவில்லை. எனவே அவரை மெதுவாக பிடித்து கொண்டு வீடு நோக்கி பயணப்பட்டார்கள். கதவை திறந்த அம்மா, ஆச்சர்யமாக அந்த அந்நியனை நோக்கினாள். அவரது கம்பளியால் முழுவதுமாக மூடிய கருமையான உருவத்தினை பார்த்து பயந்துபோன சிரில்லா அம்மாவுக்கு பின்னால் பதுங்கினாள். அவரை ரொபின்சன் கதிரையில் இருக்க வைத்துவிட்டு பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த அடுப்பில் மேலும் விறகினை இட்டார். அந்த மனிதனுக்கு ஐம்பது வயதிருக்கலாம். அவரது கால்கள் விறைத்து மரக்கட்டை போலிருந்தது. அவருக்கு சூடான சூப் பரிமாறப்பட்டது. அதை ஒருவித ஆர்வத்துடன் வேகமாக அருந்தினார். தொண்டையை செருமிக்கொண்டார். எச்சில் கூட உறைந்து தொண்டையை அடைத்திருக்குமோ என்று சந்தேகம் வருமளவுக்கு கஷ்டப்பட்டார். "நன்றி நண்பரே".. ஒருவாறாக ஓரிரு வார்த்தைகள் வெளியே வந்தன. "நீங்க இப்ப ஓய்வெடுங்க.. பிறகு பேசிக்கலாம்" என்று அவரை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்றார் ரொபின்சன். சிரில்லா சமையலறை கதவுக்கு பின்னால் பதுங்கி பார்த்து விழித்துக்கொண்டிருந்தாள்.

மாலைப்பொழுது, ஆனால் சூரியன் மறைக்கப்பட்டு, இருள் வியாபித்திருந்தது. வீட்டுக்கு வந்திருந்த அந்நியரான மனிதனின் பெயர் "பிளாட்ரோ" என்று அறிந்து கொண்டனர். தியோ தன்னிடம் இருந்த மரத்தாலான பொம்மைகளை அவருக்கு கொண்டு வந்து காட்டினான். "பிளாட்ரோ" புன்னகையுடன் அவற்றை பார்த்தவண்ணமிருந்தார். அவன் அவரிடம் எறிந்த மரப்பந்தை அவனிடமே திருப்ப எறிந்தார். இப்படியே கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருவரும் ஒரு புரிந்துணர்வில் விளையாடிகொண்டிருந்தனர். ஒளித்துகொண்டிருந்த சிரில்லா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கிட்டே வந்து விட்டாள். "தியோ நானும் வரேண்டா" என்று மழலை மொழியில் ஆரம்பித்தாள். "ம்.. ம்... நாங்க இருவரும் பந்தை மாறி மாறி எறிவோம்.. நீ இந்த பந்தை பறிக்கவேணும்" என்று அவளுக்கு கொஞ்சம் மேலாக பிளட்ரோவிடம் எறிந்தான். அவரும் சிரில்லாவிடம் அகப்படாமல் அவனிடம் பந்தை லாவகமாக எறிந்தார். இப்படியே கொஞ்ச நேரம் சென்றது. சிரில்லாவின் முகம் சிவந்து கொண்டே போனது. விட்டால் கொஞ்ச நேரத்தில் அழுது விடுவாள் போலிருந்தது. இதனை அவதானித்த பிளாட்ரோ அவளை நோக்கி எறிந்தார். "எனக்கு வெற்றி வெற்றி.. ன.. னா.. ணா" என்று வெற்றிக்கூச்சல் போட்டாள் சிரில்லா. தியோ பிளாட்ரோவை நோக்கி முறைத்துப்பார்த்தான். அவரும் ஏதோ தவறுதலாக அவளிடம் பந்தை எறிந்து விட்டது போல தலையில் கைவைத்து கொண்டு கவலைப்படுவது போல் நடித்தார். அப்போது முன்னறைக்குள் நுழைந்த ரொபின்சன் "பிளாட்ரோ"வின் முகத்தினை பார்த்தார். களைப்பு அடங்கி, முகம் பிரகாசமாக இருந்தது. "நீங்க இந்த கடும் பனியிலே எதுக்கு மேற்கு பக்கம் போறீங்க.. எல்மிரா டவுனுக்கா போயிடிருந்தீங்க" என்று சம்பாஷணையை ஆரம்பித்தார் ரொபின்சன். அவர் புன்னகை கலந்த நன்றியுணர்வுடன் ரொபின்சனை பார்த்தவாறு பேச்சை ஆரம்பித்தார். "ஆமா! என்ன செய்யிறது.. கட்டாயம் போய் ஆகவேண்டிய சூழ்நிலை.. எனக்கு சவுத் கில்லில மரம் வெட்டுற வேலை.. எனக்கு ஒரு மகனும், சிரில்லா வயசில சின்ன பொண்ணு இருக்காங்க.. அவங்க எல்லோரும் எல்மிரா டவுணில் இருக்கிறாங்க.. ஒரு வருஷத்தில் கிறிஸ்மஸ் நேரத்திலேதான் விடுமுறை கிடைக்குது.. குளிர் காலத்தில என் சின்ன பெண்ணுக்கு இழுப்பு நோய் வரும்.. இந்த முறை கடுமையா வந்திட்டதா தகவல் சொல்லி அனுப்பினாங்க.. அதான் பனியை பத்தி யோசிக்காம கிளம்பிட்டேன்". முகத்தில் ஒருவித யோசனையுடன் கூடிய சோகம் இருந்தது. "கவலைப்படாதீங்க! பனி இன்னும் இரண்டு நாளில் குறைஞ்சுடும் போல இருக்குது. இரண்டு நாள் இங்க தங்கி இருந்துட்டு போங்க.. இன்னும் அஞ்சு மைல் போனால் ஹோர்ஸ்ஹெடில் குதிரை வாடகைக்கு எடுக்கலாம். பனியும் குறைஞ்சுடும்" என்று ஆறுதல் கூறினார். "அதுசரிதான், ரொபின்சன்! ஆனா அந்த சின்ன பெண்ணு தாக்குபிடிப்பாளா என்றுதான் தெரியவில்லை" என்று கதிரையில் சாய்ந்தவாறு கர்த்தரை எண்ணி நெஞ்சில் சிலுவையிட்டார். ரொபின்சன் அவரை உற்று பார்த்தார். இப்போது அவரது உடலை சுற்றி மூடியிருந்த முரட்டு கம்பளி உடை இல்லை. ஆள் அநியாயத்துக்கு மெலிந்திருந்தார். கால்கள் தடி போல இளைத்திருந்த்தது. கண்களில் பத்து நாட்கள் தூங்காதது போல் கடுமையான அயர்ச்சி இருந்தது. இவ்வளவு தூரம் எப்படித்தான் நடந்து வந்தாரோ என்று எண்ண வேண்டியிருந்தது.

இவ்வாறாக இரண்டு நாட்கள் நகர்ந்தன. "பிளாட்ரோ"வின் உடல்நிலையில் அவ்வளவான முன்னேற்றமிருக்கவில்லை. கிறிஸ்மஸ்க்கு இன்னும் ஏழு நாட்களே இருந்தன. ரொபின்சனுக்கு அவரைப்பற்றிய கவலை அதிகரித்தது. மனிதர் இளைத்து தொண்ணுறு வயது முதியவர் போல காணப்பட்டார். ஆனால் எப்போதும் சிரித்துகொண்டே சிரில்லா, தியோவுடன் விளையாடிகொண்டிருந்தார். இரவு வேளைகளில் தனியாக இருக்கும்போது கண்ணீர விட்டு அழுவதை ரொபின்சன் பார்த்திருக்கிறார். இக்கட்டான சூல்நிலையிலிருக்கும் மகளை கடைசியாக கூட காண முடியாமல் போய் விடுமோ என்று அழுதிருக்கலாம். தனது துயரை மீண்டும் ஒருமுறைகூட வெளிக்காட்டாமல் இருந்தார்.

அன்றுடன் அவர் வந்து நான்கு நாட்களாகி இருந்தது. காலையிலேயே பனி குறைந்து காணப்பட்டது. இன்றைக்கே கிறிஸ்மஸுக்கு தேவையான இறைச்சிக்கான வேட்டையை இன்றே நடத்தவேண்டும் என்ற முடிவுடன் காலை எழுந்து வந்த ரொபின்சனிடம், ஒருவித பரவசத்துடன் குழந்தை போல ஓடி வந்தார் "பிளாட்ரோ". "நான் இப்போதே கிளம்புகிறேன் ரொபின்சன். பனி குறைந்து விட்டது. நான் இப்போதே புறப்பட்டால் கிறிஸ்மஸுக்கு வீட்டை அடைந்து விடலாம்". அவர் கம்பளி உடையால் நன்கு மூடி கையில் பெரிய பையுடன் புறப்பட ஆயத்தமானார். தியோவும் சிரில்லாவும் இன்னும் எழுந்திருக்கவில்லை, ரொபின்சனும் மனைவியும் வாசலிலே அவரை விடைகொடுத்தனர். "தியோவிடமும், சிரில்லாவிடமும் சொல்லி விடுங்கோ. நான் மறுபடியும் வருவேன். எல்லாத்துக்கும் நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக" என்று விட்டு திரும்பிப்பாராமல் நடந்தார். அவர் புறப்பட்டபின் தனது வேட்டைக்கு ஆயத்தமானார் ரொபின்சன். அவரின் வீட்டுக்கு பக்கத்திலுள்ள காட்டில், மரைகள் நிறைய இருந்தன. மீண்டும் பனிப்பொழிவு தொடங்கமுன் இரண்டு மரைகளையாவது வேட்டையாடவேண்டும். கிறிஸ்மஸ் நெருங்க நெருங்க பனிப்பொழிவு உச்சத்திலிருக்கும். வெளியே கால் வைத்தால் உயிருடன் திரும்ப உத்தரவாதமில்லை. தியோவும் அவருடன் வேட்டையாட ஆயத்தமானான். "அப்பா! பிளாட்ரோ எங்கே போய் விட்டார். மரத்தில் கிறிஸ்மஸ் தத்தா பொம்மை செய்து தரதா சொன்னருப்பா" என்று கேட்டான். "பனி கொஞ்சம் குறைஞ்சுடுச்சு அதான் அவசரமா போய் விட்டார். உனக்கு சொல்ல சொன்னார். திரும்பி ஒருநாள் வருவாராம்" என்றார் ரொபின்சன்.

ரொபின்சனும் தியோவும் காட்டின் எல்லைப்பகுதியில் மரைகளை தேட ஆரம்பித்தனர். ஆனால் இன்று அதிஷ்டம் அவர்களின் பக்கமிருக்கவில்லை. காட்டுக்கு உள்ளே போய் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு விலங்குகளையும் காணவில்லை. வழமையாக சூரிய வெளிச்சம் வரும்போது விலங்குகள் வெளிவர ஆரம்பிக்கும். ஆனால் இன்று எவற்றையும் காணவில்லை. ரொபின்சன் கொஞ்சம் அதிர்ந்து போனார். எதோ பனிப்புயல் வருவதற்கு முன்னர் வரும் அமைதி போல காடே அமைதியாக இருந்தது. "அப்பா! ஒன்றையுமே காணவில்லை. இன்னும் உள்ளே போனால் செவ்விந்தியர்களின் குடியிருப்பு வந்து விடும். வாங்கோ வீட்டுக்கு போய் விடுவோம்". என்று தியோ கத்தினான். திடீரென்று வெளிச்சம் குறைய ஆரம்பித்தது. காற்று குளிர ஆரம்பித்தது. இருவரும் பேசிகொள்ளாமல் வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

வீட்டினை அடைய நான்கு மணித்தியாலங்கள் ஆகலாம். காட்டின் எல்லைக்கு சென்றடைய முன்னரே பனிப்புயல் கடுமையானது. தியோ நடக்க முடியாமல் பனியில் சறுக்கி விழுந்தான். ரொபின்சன் அவனை தூக்கியவாறு ஒரு மரத்தின் பின்னால் பதுங்கினார். அப்போதுதான் அவருக்கு "பிளாட்ரோ"வின் ஞாபகம் வந்தது. கடவுளே அந்த கிழவர் இந்த புயலில் சிக்கிவிட்டாரே. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் இந்த இடத்தினை விட்டு பத்திரமாக வெளியேறி இருப்பார். கடவுளே அவரை காப்பாற்று என்று வேண்டிகொண்டார். பனிப்புயல் கடுமையாக வீசியது. இருள் சூழ்ந்து பயங்கரமாக இருந்தது. பசியால் பிராணன் போனது. இப்படியே இரண்டு நாட்கள் தொடர்ந்து வீசினாலே அந்த இடத்தினை விட்டு நகர முடியாமல் மடிய வேண்டியதுதான். உடல் கடுமையான குளிரால் விரைத்து போனது. காலநிலை பற்றி பிழையாக கணித்ததை எண்ணி வருந்தினார். ரொபின்சனின் தியோ பசியால் நித்திரையானான். ரொபின்சனுக்கு கட்டுபடுத்த முடியாத மயக்கம் ஆட்கொள்வதை உணர்ந்தார். "கடவுளே எப்படியாவது எங்களை காப்பாற்று".

சூடாக வாயில் ஏதோ பருக்கப்படுவதை உணர்ந்தார். ஒருவிதமான மூலிகை வாசனையடித்தது. இப்போது ஒருவித வெம்மை இருந்தது. இது ஏதோ ஒரு செவ்விந்திய கூடாரம். ஒரு வயதான செவ்விந்திய கிழவர் அவனை கருணையாக பார்த்து அவனுக்கு ஏதோ ஒரு சூடான மூலிகை நீரை பருகத்தந்தார். பக்கத்திலே தியோ அமர்ந்திருந்தான். "அப்பா! நாங்க தப்பித்தோம். இப்ப புயல் குறைஞ்சிடுச்சு. இவங்கதான் எங்களை காப்பாற்றிஇருக்கிறார்கள்" என்று கூவினான். அப்போது ஒரு செவ்விந்திய இளைஞன் உள்ளே நுழைந்தான். அவன் "ஒரு கிழவர்தான் காட்டின் மயங்கிகிடந்த உங்கள் இருவரையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் என்னவோ தெரியலை நீங்கள் மயங்கிகிடந்த இடத்தினை காட்டிவிட்டு மறைந்து போய் விட்டார்" என்று காப்பாற்றிய கதையை விளக்கினார். அதிர்ந்து போன ரொபின்சன் "அவர் எப்படி இருந்தார்" என்றார். "கறுப்பான கம்பளி உடை உடுத்தியிருந்தார். மேரி மாதா படம் போட்ட சங்கிலி அணிந்திருந்தார்". ரொபின்சனுக்கு இப்போது எல்லாம்
புரிந்தது.

"மீண்டும் வருவேன் என்று கூறினீர்களே பிளாட்ரோ. எங்களுக்காக இறப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்களே"

No comments:

Post a Comment