Saturday, February 22, 2014

Software Companyயில அப்படி என்னதான் கிழிக்கிறாங்க..?

காலை எட்டு மணி பத்து நிமிஷம். சூரிய வெளிச்சம் கண்ணில் பட்ட ஒரே காரணத்துக்காக கண்ணை கஷ்டப்பட்டு திறந்தேன். இன்னும் பத்து நிமிஷம் நித்திரை கொள்ளணும் போல இருந்திச்சு. அப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ sms வந்தது போல சத்தம் கேட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. எடுத்துப்பார்க்கணும் போல ஆர்வமா இருந்துச்சு. அவளா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு பார்த்த எனக்கு ஏமாற்றம் என்பதைவிட அதிர்ச்சியா இருந்ததுதான் உண்மை. Project manager பயல்தான் அனுப்பியிருந்தான். "நேற்று ராத்திரி நீ develop பண்ணின moduleலில் நாலு bugs கண்டுபிடிக்கப்பட்டிருக்கு உடனடியாக வந்து fix பண்ணினால் நன்றியுடையவனாக இருப்பேன்" என்றது sms. அந்த செக்கனிலேயே நித்திரை கலைந்தது. "நரிப்பயல் நேரம் கெட்ட நேரத்தில sms அனுப்பி உசிரை எடுக்கிறான்." என்று கறுவிக்கொண்டேன். அடுத்த பக்கம் திரும்பிப்படுத்தேன். ஆனால் ஒரு உண்மையான Software Engineerஆல் இதனை தட்டிக்கழிக்க முடியாது. மண்டைக்குள் என்னவோ செய்தது. நித்திரை முழுவதுமாக போய் மனதில் வைராக்கியம் வந்தது. "என்ட moduleலில வரும் bugஐ வேற எவனாவது fix பண்ண அனுமதிக்கலாமா?" என்று என் மனச்சாட்சி கேட்டது. இல்லை.. இல்லை.. என்று ஆயிரம் குரல்கள் மண்டைக்குள் ஒலித்தன. எல்லா Software Engineerகளின் மனதுக்குள்ளே  இப்படித்தான் ஆயிரம் குரல்கள் மண்டைக்குள் இருக்கும். இந்த குரல்கள்தான் அவனை வழிநடத்தும். பிரஷ்ஷில் கொஞ்சம் பேஸ்ட்டை போட்டு பல்லில் பட்டும் படாமலும் பல்லை தீட்டினேன். ரெண்டு கிழமையா தோய்க்காத ஜீன்சை எடுத்து மாட்டிக்கொண்டு பறந்தேன்.

பஸ்ஸில் ஏறி கண்ணை கொஞ்சமாக மூடி நித்திரையை தொடர்ந்தேன். கனவில் bug fix பண்ண முயற்சிப்பது போல வந்திச்சு. எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. யாரோ தோளை தட்டினார்கள். Project managerதான் தட்டுகிறானோ என்று பயந்து கொண்டே திரும்பினேன். கண்டக்டர்தான், பஸ் காசு கேட்க தட்டியிருக்கிறான். காசை கொடுத்தேன். ஏதோ கிண்டலாக என்னை பற்றி பக்கத்திலிருப்போரிடம் சொல்லி சிரித்தான். நல்லவேளை சிங்களத்தில் சொன்னதால ஒண்ணுமே விளங்கவில்லை. Software Engineerஆ இருந்துகொண்டு சூடுசுரனை தேவையா.. மறுபடியும் கொஞ்சம் நித்திரை கொண்டேன். என்ட ஆபீஸ் அருகில் ஒரு பேக்கரி இருக்கும். பஸ்ஸில் போகும்போதே கேக் வாசனை முகத்தில் அடிக்கும். அதனை அடையாளமா வச்சு சரியா முழிச்சிடுவேன். ரெண்டு, மூன்று நாள் பேக்கரிக்காரன் கேக் போடாமல்விட, சரியான பஸ் haltஇல் இறங்காமல் கொஞ்ச தூரம் தள்ளி இறங்கி நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நான் தூங்கி ஆபீஸ்ஸுக்கு போய் சேர்ந்தபோது மணி பத்து. ஆபீஸ் பாரதப்போரின் பத்தாம் நாள் முடிவில் இருந்த நிலைமைக்கு ஒத்ததாக இருந்தது. மூன்று பேர் மேசையில் நித்திரை தூங்கிகொண்டிருந்தார்கள். இன்னும் ஐந்து பேர் கண்ணில் கருவளையத்துடன் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை முறைத்துக்கொண்டிருந்தார்கள். Project manager மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவன் மாதிரி freshஆ இருந்தான். என்னை பார்த்ததும் குட் மோர்னிங் சொல்லி
அடக்கடவுளே இன்னொரு "bug"
புன்னகைத்தான். நானும் அவனை பார்த்து கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்துக்கொண்டு குட் மோர்னிங் சொன்னேன். எனக்கு பக்கத்தில் இருக்கும் நீலன் அப்போதுதான் முகம் கழுவிக்கொண்டு பிரஸ் டூத்பேஸ்ட் சகிதம் ஆபீஸ் washroomஇலிருந்து வந்தான். நானும் எனது ஆபீஸ் மேசைக்கு அடியில் பிரஸ், டூத்பேஸ்ட், சின்னதாய் ஒரு சோப் வச்சிருப்பேன். வேலைக்கு சேர்ந்த தொடக்கத்தில் எல்லா பயலுகளும் ஏன்தான் இப்படி பிரஸ் டூத்பேஸ்டை மேசைக்கு அடியில் வைத்திருக்கிறார்கள் என்பது முதலில் புரியவில்லை. இரண்டு நாட்கள் இரவை ஆபீஸ்ஸில் கழிக்க நேர்ந்தபின்னர்தான் அந்த ரகசியம் புரிந்தது. எப்போதாவது வேலையை முடிக்கமுடியாமல் போனால் அன்று சிவராத்திரிதான். மற்ற எல்லாருக்கும் வருசத்தில் ஒரு நாள்தான் சிவராத்திரி. ஆனா Software Engineerகளுக்கு எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் வருசத்துக்கு நாலைஞ்சு தடவையாவது வந்து போகும்.

"எப்படிடா நீலா! நேற்றிரவு வேலை எப்படி போச்சு" என்று பேச்சை அப்பாவித்தனமாய் ஆரம்பித்தேன். "உன்ட moduleஇல் நாலு bug இருந்துச்சு. சரியாவே டெஸ்ட் பண்ண மாட்டியா? போதாக்குறைக்கு code compile பண்ணுதில்லை. அதை ஒரு மாதிரி சமாளிக்கவே அஞ்சு மணித்தியாலம் போச்சு. உன்னாலே எனக்கு நேற்று ராத்திரி முழுக்க அநியாயமா போச்சுடா" என்று முறைத்தான். உன்னால "code compile பண்ணுதில்லை" என்றது எனது முகத்தில் அறைந்தது போல இருந்தது. நெஞ்சு படபடத்தது. நான் நேற்று commit பண்ணின codeதான் compilation failureக்கு காரணமா என்று தீவிரமாக ஆராய்ந்தேன். என்ட computerஇல் சரியா வேலை செய்தது. ஆனால் தீவிர தேடுதல் முயற்சியில் compile ஆகாத codeஐ commit பண்ணிய புண்ணியவான் அர்ஜுன் என்று gitweb கூறியது.

அர்ஜுன்தான் எங்கட TechLead. எங்களைவிட கொஞ்சம் சீனியர். சுமார் ஆறு வருசமா கொம்பனியே கதி என்று பழியா கிடக்கிறான். அதனால நேரடியா "உங்கட பிழைதான்" என்று விஷயத்தை உடைக்க ஏலாது. சுத்தி வளைச்சு எப்படியாவது "நைசா" சொல்லணும். என்ன சொல்றது என்று தெரியாமலே அவனது இடத்தை நோக்கி நடந்தேன். ஆனால் அந்த பயல் இந்த projectஇன் சீரியஸ் நேரத்திலும் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்து பரவசமா புன்னகைத்துக்கொண்டிருந்தான். chatஇல் யாரோவொரு பொண்ணுக்கு smileyகளை ஜாலியாக அனுப்பிக்கொண்டிருந்தான். அர்ஜுன் சரியான மூளைசாலி அவனால்தான் project ஒருமாதிரியா நடை பழக ஆரம்பிச்சிருக்கு. அதனால Project Manager அவனை ராசா மாதிரி நடத்துவான். பத்து வருசமா ஒரு கேர்ள் பிரண்ட் வேணும் எண்டு தேடுதல் வேட்டை நடத்தினான். எல்லாமே பெயிலியர். இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் ஒரு பொண்ணு சிக்கியிருக்கு. ரெண்டு மாசமா chatஇல்தான் மவராசன் மிளகாய் அரைக்கிறான். அடிக்கடி தனக்கு தானே சிரித்துகொள்ளுவான். மாடிப்படி ஏறி முடிந்தபின்னரும் அந்தரத்தில் நடப்பது போல நடந்தான். அடிக்கடி சரியாக டெஸ்ட் பண்ணாமல் codeஐ commit பண்ணி எங்கள் உயிரை எடுத்தான். அர்ஜுனின் கவனக்குறைவால் வந்த bugsகளை "Love Bugs" என்று புது categoryயில் Jiraவில் log பண்ணவேணும் என்று எங்களுக்குள் பேசி சிரித்துக்கொள்வோம். இவனது தடாலடி மாற்றங்களை பார்த்த துமிலன், "மச்சான்! அரைகுறை அறிவோட ஒரு Developer டீமில் இருந்தாலும் பரவாயில்லை.. ஆனா லவ்வுல விழுந்த ஒரு developerஐ டீமில வச்சிருந்தா மற்றவங்களுக்கு வாழ்க்கையே நரகமாயிடும்டா" என்று புலம்புவான்.


துமிலன்தான் எங்கள் ஆபீஸின் கருத்து கந்தசாமி. கொஞ்சம் டீசண்டாக சொல்வதானால் Business Analyst. அவன் கருத்துப்படி Software Engineerகள் எல்லோரும் கறைபடாத புண்ணிய ஆத்மாக்கள். மற்றவர்கள் எல்லோரும் வில்லன்கள். எப்போதாவது இரவு நேரத்தில் ஆபிசில் நின்று வேலை செய்யவேண்டி வந்தால், அவன் பிரசங்கம்தான் எங்கள் நித்திரையை போக்கும் நிவாரணி. எக்கச்சக்கமாக உளறுவான். Client யாராவது requirementsஐ மாற்றினால் பயல் சூடாகி விடுவான். "சாகாம சாகிறவன்தான் Software Engineer.. சாவடிக்கிறவன்தான் client.. அவங்கட கைக்கூலிதான் நம்மட Project manager" என்பான். அவன் அடிக்கடி எடுத்துவிடும் புதுமொழிகளை Facebookஇல் ஒரு போஸ்டாக போடலாம். குறைஞ்சது நூறு லைக்காவது விழும். ஆனாலும் அவன் ஆபீஸுக்குள்ளே ஜோக்கராக இருந்தாலும், சார் வெளியே ஒரு மன்மதன். அவனுடைய பாஸ்வோர்ட்களை எளிதாக ஊகித்து விடலாம். அவனது அப்போதைய girlfriendஇன் பெயரையே பாஸ்வோர்டாக வைத்திருப்பான். அதை வெளியே சொல்லிக்கொள்வதில் பயலுக்கு ஒரு பெருமை. ஆனாலும் தயங்காமல் ஆறு மாசத்துக்கு ஒருமுறை பாஸ்வோர்ட் மாற்றுவான். "ஏண்டா இப்பிடி" என்று கேட்டால், "என்னடா செய்றது அடிக்கடி பாஸ்வோர்ட் மறந்து போயிடுது" என்று அசட்டுத்தனமாக புன்னகைப்பான். இவன மாதிரி ஆளுகளாலதான் Software Engineerகளுக்கு மார்கட்டுல ரேட் குறைவு என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.

ஆனாலும் துமிலன் clientகளை அற்புதமாக கையாளுவான். ஒருமுறை அழகு சாதனபொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றுக்கு ERP system implement செய்யவேண்டிய project எங்களுக்கு கிடைத்தது. ERP System பற்றி சரியாக தெரியாத என்னையும், துமிலனையும் மாலை போட்டு மஞ்சள் தண்ணி தெளிச்சு அனுப்பி விட்டார்கள். அப்போது அவனும் என்னை மாதிரியே ஒரு சாதாரண Software Developerதான். கோட்டு போட்ட இரண்டு பொண்ணுகளோடுதான் முதல் நாள் requirements meeting. மேடம் சாண்ட்ரா முப்பத்தைந்து வயது, எல்லாம் தெரிந்த அனுபவசாலி போல இருந்தாள். அவளோடு இருபது வயது போல இருந்த சில்வியா. அவள் கொம்பனியில் இலவசமாக கொடுத்த மேக்கப் சாதனங்களை பூசிக்கொண்டு பொம்மை மாதிரி சிக்கனமாக புன்னகைத்தாள். இவர்களோடு நானும் ஒரு ஆம்பிளை இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள கண்ணாடி போட்ட கோதுமை நிறத்தில் ஒருவன். தொடங்கியதுமே எக்கச்சக்கமான கேள்விக்கணைகள்.. சமாளிக்க முடியாமல் திணறினேன். சில கேள்விகளுக்கு மௌனம் சாதித்தேன். துமிலன் தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல சும்மா பக்கத்தில் இருந்தான். மீட்டிங் முடிந்தது. போரில் தோல்வியுற்ற தளபதி போல அவமானத்துடன் வெளியே வந்தேன்.


"என்னடா மச்சான்! எல்லா கேள்விக்கும் எப்படி என் ஒருவனால் பதில் சொல்ல முடியும். நீயும் உனக்கு தெரிஞ்ச ஏதாவது சொல்லி சமாளிக்க வேணாமா" என்று எனது மனக்குறையை வெளியிட்டேன். "அதில வந்த குறைச்சலா பேசின மற்ற பொண்ணு அழகா மேக்கப் போட்டுட்டு வந்திச்சு இல்ல.. அதை பார்த்திட்டே இருந்தனா.. ஒண்ணுமே புரியலை" என்றான். எனக்கு வந்திச்சே ஒரு கோபம். அன்றிரவு நடந்த சண்டையின் முடிவில் மீட்டிங்போது எனக்கு சப்போர்ட் பண்ணுவதாக ஒப்புகொண்டான். அடுத்த நாள் முழுக்க மேடம் சாண்ட்ரா கேள்வி கேட்க நான் மேலோட்டமாக ஏதோ சொல்ல அவள் அதற்கு மேல் விளக்கம் கேட்க துமிலன் விரிவாக புளிபோட்டு விளக்கமளித்தான். முன்னுக்கு இருந்த White Boardஇல் கன்னா பின்னாவென்று ஏதேதோ வரைந்தான். கொஞ்சம் UML மாதிரியும் கொஞ்சம் BPMN மாதிரியும் கலந்து வரைந்தான். மேடம் சாண்ட்ரா அதை தனது நோட்புக்கில் குறித்துகொண்டாள். சில்வியா வச்ச கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அரசியல்வாதிகள் போல இஷ்டத்துக்கு அதை செய்து தாறோம், இதை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தான். அதில் வரைந்த படங்களுக்கும் நாங்கள் develop பண்ண இருக்கும் systemத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தாலும், குறுக்கிடாமல் எனக்கு கேள்விகளுக்கிடையில் கிடைத்த ஓய்வை அனுபவித்தேன்.

"சும்மா கலக்கிட்டேடா மச்சான். எப்படிடா இப்படி" என்று பாராட்டினேன். "பொண்ணுங்களுட்ட பேச ஒரு முறை இருக்கு. காலங்காலமா ஒரு விதிமுறை இருக்கு அதை பின்பற்றினாலே போதும். எனக்கு இதெல்லாம் தண்ணி பட்டபாடு.. நீ ஒரு கேள்வி கேட்டா, ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிப்ப, நான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதோ கதை கதையா சொல்றன்" என்றான். பின்னாட்களில் ஏதாவது பிரச்சனை வந்தால் துமிலன்தான் மெயில் அனுப்பி clientஐ சம்மதிக்க வைத்தான். எங்கள் கம்பெனியில் Developer, Business Analyst, QA Engineer என்று வேறு வேறாக roles அதுவரை இருக்கவில்லை. அந்த நிகழ்வின் பின்னர் துமிலன் முழுநேர Business Analyst ஆக நியமிக்கப்பட்டான். இதுபோலவே நீலன் நாங்கள் செய்யும் வேலைகளில் தவறு கண்டுபிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனது develop செய்யும் வேலைகள் எங்களது தவறுகளால் பாதிப்படைவதாக project managerஇடம் சாதித்தான். இதனாலேயே அவன் முழுநேர QA Engineerஆக மாற்றம் பெற்றான். எங்கள் codeஇல் வரும் functionality தவறுகளை கண்டுபிடிப்பது அவனுடைய முழுநேர வேலையானது. புதுசா புதுசா வெவ்வேறு கோணங்களில் systemஐ டெஸ்ட் செய்து நிறைய bugs கண்டுபிடிப்பான்.

இப்படித்தான் எங்கள் கம்பெனியும் வளர வளர புதிது புதிதாக roleகள் உருவாகின. Business Analyst, QA Engineer போன்ற வேலைகள் குறிப்பிட்ட சிறப்பியல்புகள் தேவைப்படுவது போன்று Software Developer என்பதற்கும் சில முக்கிய தகுதிகள் இருக்கின்றன. Developer எனப்படுபவன் bug-free softwareஐ உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறான். ஆனால் அது இம்மையில் முடியாத காரியம். ஆகவே ஒரு bug அவனது moduleஇல் வந்தால் அதனை ஒத்துகொள்ளும் மனபக்குவம்  வேண்டும். Client கேட்கும் கேள்விகளில் தடுமாறினாலும், Clientக்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதே அவனது ஒரே குறிக்கோளாக இருக்கக்கூடிய ஒருவனே சிறந்த developer. ஆனால் சில நேரங்களில் அவன் ஒரு பலியாடு போல உணரும் சந்தர்ப்பங்கள் வரலாம். ஆனால் சூடுசுரனை இல்லாதவன்தான் Software Developer.


இந்தக்கதை நான் கண்ணால் கண்டு எழுதியது அல்ல. ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்த நாலு Software Engineerகளான நண்பர்களிடம் கேட்ட ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத அனுபவ கதைகளை கஷ்டபட்டு ஒட்ட முயற்சித்திருக்கிறேன். அவ்வளவுதான்.. நானும் ஒரு Developer என்பதால் கதையின் கடைசியில் ஹீரோ மாதிரி காட்டியிருக்கிறேன் :P. ஜோக்கர் மாதிரி அவன் உங்களுக்கு தோற்றினால் கண்ணை கழுவிவிட்டு மீண்டும் வாசிக்கவும் :).



7 comments:

  1. //ஆனா லவ்வுல விழுந்த ஒரு developerஐ டீமில வச்சிருந்தா மற்றவங்களுக்கு வாழ்க்கையே நரகமாயிடும்டா" //

    Classic .. கன நாளா இத வச்சு ஒரு சிறுகதை எழுதோணும் எண்டு ஆசை .. இன்னும் plot கிடைக்கேல்ல... நீங்க கலக்கியிருக்கிறீன்கள்.

    ReplyDelete
  2. Very nice Real story Akka like it It's Amzing

    ReplyDelete
  3. // கனவில் bug fix பண்ண முயற்சிப்பது போல வந்திச்சு.
    ஹி ஹி...

    ReplyDelete
  4. இந்த மாதிரி எல்லா கம்பனியிலும் நடக்கும் நிகழ்வுகள் சகஜம் தான் .அதை கண்டும் காணமல் இருக்க வேணும் .
    உங்கள் கடமையை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் செய்து மேலிடத்தில் நல்ல அபிப்பராயம் பெற வேணும் !.
    உங்கள் பணியை சரிவர செய்து பணியில் மென்மேலும் உயர வேணும் .உங்கள் கம்பனியின் குறிக்கோளை அடைவதற்கு உங்கள் குழுவில் உள்ள சகல ருக்கும் ஒத்தாசை ,ஒருங்கிணைப்பு ,நல்லுறவு மிக அவசியமானது ..

    ReplyDelete
  5. Drama in real life! Nice story line !!!
    I love it man. keep it up.

    ReplyDelete