Saturday, October 15, 2011

கனவே கொல்லாதே!

அந்த புத்தக கடைக்குள் ஒருவித ஆர்வத்துடன் நுழைந்தேன். மங்கலான வெளிச்சம் அந்த கடை முழுவதும் பரவியிருந்தது. பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மேல் பார்வையை ஓட விட்டேன். இதுவரை கண்டிராத புது புது பெயர்களுடன் கண்ணை கவரும் அட்டைபடங்களுடன் வந்திருந்தன. நான் தேடிவந்த "விண்வெளியில் குள்ளநரி " என்ற புத்தகத்தினை மட்டும் காணவில்லை. எதற்கும் கடைக்காரிடம் கேட்போமா என்று யோசித்தேன். இல்லை வேண்டாம், பக்கத்தில் இரண்டு அழகான பெண்கள் நிற்கிறார்கள். கடைக்காரர் எதாவது சொல்லி அந்த அழகிகள் முன்னிலையில் என் மானத்தினை வாங்கி விடுவார்.

 நான் புத்தக குவியலில் தேடுதல் வேட்டையில் இருந்தபோது, கடைக்காரர் சடாரென்று ஒரு புத்தகத்தினை நீட்டி. "இதை படித்து விட்டீர்களா! புதுசா வந்திருக்கு.. எல்லோரும் கேட்டு வாங்கிறாங்க" என்றார். "இணைய விளம்பல்கள்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது, மூளையில் ஏதோ பொறி தட்டியது போலிருந்தது. "அடப்பாவி! இந்த தலைப்பில்தான் நான் ப்ளாக் எழுதுவேன்". வெளியே எழுத்தாளரின் பெயரை காணோம். வேகவேகமாக உள்ளே புரட்டிய எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த எழுத்தாளரின் பெயர் "துயில்பவன்" என்றிருந்தது. அட அதுதான் என்னுடைய புனைப்பெயர். கடவுளே! கிழக்குப்பதிப்பகத்தினர் என்னுடைய ப்ளாக்கில் இருந்த சிறுகதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். என்னுடைய எழுத்துகளை மக்கள் இவ்வளவு ரசிக்கின்றனரா? நம்பவே முடியாமல் அந்த புத்தகத்தினை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டேன்.

"மிஸ்டர் துயில்பவன்.. இப்ப சந்தோசம்தானே! நீங்க பெரிய எழுத்தாளராக உருவேடுத்திட்டீங்க. இனிமே ஆள பிடிக்கமுடியாது. இனிமே நான் எழுதுற ப்ளாக்கெல்லாம் பார்க்கவே நேரம் இருக்காது" என்று ஒரு பரிச்சயமான ஒரு குரல் கேட்டது. அட இவன்தான் செல்வன். என்னுடைய இணைய இலக்கிய உலகத்திலேயே முதலாவது எதிரி. என்ன ஆச்சர்யம்! அவன் கடைக்காரர் நின்று கொண்டிருந்த இடத்திலே நின்று கொண்டிருந்தான். படுபாவி! என்னை அதிர்ந்து போக வைத்துவிட்டான். அவன் முகத்தில் இருந்த ஏளன சிரிப்பு எனது நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவன் கையில் துப்பாக்கி வேறு இருந்தது. "ஏய் இந்த புத்தகம் வித்து வாற பணத்தினை அனுபவிக்க நீ உயிரோடு இருக்கப்போவதில்லை. திரும்பி பார்! சொர்க்கம் தெரியும்" புன்னகை மாறாமல் கூறினான். திரும்பி பார்த்தபோதுதான் தெரிந்தது நான் இவ்வளவு நேரமும் ஒரு பலமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்திருக்கிறேன் என்று. திரும்பிய எனது முதுகில் கத்தியை வைத்து அழுத்தினான். முள்ளந்தண்டில் ஏற்பட்ட கடுமையான வலியை தாங்க முடியாமல் கால் தடுமாறி கீழே விழத்தொடங்கினேன். நெஞ்சுக்குள் பயங்கர வலியெடுக்க விழுந்து கொண்டே இருந்தேன்.

அம்மாடி.. கடவுளே உனக்கு நன்றி.. இது ஒரு கனவுதான். இதயம் கடுமையாக துடித்து கொண்டிருந்தது. கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்திருக்கிறேன். சே! என்னுடைய உப்புசப்பில்லாத கதையை எவன்தான் பதிப்பிக்கபோறான். ஆனால் செல்வன் வேற கனவில வந்தானே.. அவனை பற்றி இரண்டு மூணு நாளா கடுமையா யோசிச்சிட்டிருந்தேன். அதான் வந்திருக்கான். ஆனா அவனை நேரில் பார்த்ததில்லை.. இன்டர்நெட்டில் அவனது ஒரு போட்டோ கூட கிடைக்காது. கனவில் வந்த செல்வனின் முகத்தினை ஞாபகப்படுத்த முயன்று தோற்றேன். என்னுடைய மனம் அவனுக்கு ஒரு உடல், துப்பாக்கி கொடுத்து கனவிலே உலாவவிட்டிருக்கு. ஆனால் ஞாபகத்துக்கு மட்டும் வரமாட்டேங்குது. நெஞ்சில் சின்ன வலி இன்னும் இருந்தது. அதிகாலைவேளையில்தான் மாரடைப்பு வரும் என்பார்கள். கொஞ்ச நேரத்திலேயே எல்லாவற்றையும் மறந்து ஆழ்ந்த நித்திரைக்கு திரும்பினேன்.

என்னுடைய செல்போனின் கடுமையான ரிங்டோன் சத்தம் காரணமாக எழுப்பப்பட்டேன். முகிலன்தான் எடுக்கிறான்.. பரதேசிப்பயல்! சனிக்கிழமை காலை நித்திரை கொள்ள விடாமல் தொந்தரவு தாறான்.

"என்னடா சொல்லு மச்சான்"..

"டேய் குட் மோர்னிங்டா" அவன் குரல் சோர்ந்து போயிருந்தது.

"ஆமா குட் மார்னிங்.. சொல்லி தொலைடா"

"வந்து.. " என்று இழுத்தான்.

"அப்படி என்னடா முக்கிய விஷயம். மத்தியானம் சந்திக்கலாம் இப்ப போனை வச்சு தொலைடா"

"செல்வனை நேற்று இரவில பார்த்தேண்டா.. கனவுல வந்தான்.. உன்னை பத்திக்கூட ஏதோ சொன்னான்.. இனிமே வாலாட்டின கொன்னுடுவேன்னு விரட்டினான்டா மச்சான்"

எனக்கு இப்போது நித்திரை முழுவதுமாக தெளிந்து விட்டது. இரவு எனக்கு வந்த கனவு கிட்டத்தட்ட அவனுக்கும் வந்திருக்கு.

"மச்சான்! அவன் உன்னிடம் என்னதான் சொன்னான்." ஆர்வமாக கேட்டேன்.

"சரியா ஞாபகம் இல்லை. கத்தியால் குத்தின மாதிரி நெஞ்செல்லாம் வலிச்சுது. நாலு மணிக்கு எழும்பின நான் பிறகு படுக்கவே முடியாம எழும்பிட்டேன். கொஞ்சம் பயமாயிருக்குடா. நெஞ்சு நோ இன்னும் சரியாகல. நாங்க கொஞ்ச காலம் சும்மா இருக்கிறது நல்லம்டா"

"மச்சான் கிரவுண்டுக்கு போய் இரண்டு ரவுண்டு ஓடிட்டு வா! நெஞ்சு வலி காணாம போயிடும்" அவனுக்கு ஆறுதல் சொல்லிட்டு போனை வச்சேன்.

கெட்ட கனவை மறந்து தூங்கி கொண்டிருந்த எனக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்துவிட்டான். நாங்கள் இருவரும் செல்வனுக்கு எதிராக செய்த சில காரியங்கள்தான் எங்களை கனவுகளில் இவ்வாறு அவஸ்தைப்படவைத்துள்ளது. ஆழ்மனதில் உள்ள குற்றஉணர்ச்சியின் வடிகாலாக இந்த கனவுகள் வந்திருக்குமோ? முகிலனுக்கும் இதே கனவு வந்துதே. ஒரே விதமான நெஞ்சு வலி வேறு. ஒல்லியாக இருக்கிற எனக்கு மாரடைப்பு வராது என்றாலும் வேறு எதாவது பிரச்சனை வருமோ தெரியலை.

திருச்செல்வன் ஒரு பிரபலமான தமிழ் ப்ளாக்கர். "திருவின் பக்கங்கள்" என்று ப்ளாக் வைத்திருக்கிறான். நல்லா கதை, செய்திகள், அரசியல் எல்லாம் எழுதுவான். அவன் ஒரு போஸ்ட் பண்ணினால் முப்பது நிமிடங்களுக்குள் இருபது பேர் பின்னூட்டமிட ரெடியா இருப்பான்கள். அவனை பார்த்தாலே பொறாமையாக இருக்கும். நான் "யோகா" பற்றி ஒரு பதிவு போட்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு ஈ கூட மொய்க்காது. இப்படியே இரண்டு நாள். .. .. .. அட.. அதையும் மீறி ஒருத்தன் பின்னூட்டமிட்டிருக்கிறான் என்று பார்த்தால், வேறு யார் முகிலன்தான், "சூப்பரான பயனுள்ள பதிவு மச்சி" என்று ஆளில்லாத கடையில் டீ ஆத்துவான். இது போதாது என்று "மச்சி ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்கேன் போய் பாருடா" என்பான். போய் பார்த்தால் Transformers போன்ற சப்பை படங்களின் விமர்சனம் எழுதி கொல்லுவான். அந்த படத்தினை பார்ப்பதைவிட இவன் விமர்சனத்தினை வாசிப்பது பெரிய கொடுமையாக இருந்தது. போதாகுறைக்கு எதாவது பின்னூட்டமிட்டு அவன் வளர்ச்சிக்கு வேறு உதவ வேண்டும்.

"மச்சான்! பிரபலமா இருக்கிற ப்ளாக்குகளில் ஏடாகூடமாக எதாவது பின்னூட்டமிட்டு எங்கள் புதிய போஸ்டின் லிங்கை கொடுத்து விட்டா.. ஈசல்கள் போல எங்கட ப்ளாக்குக்கு பலரை வரவழைக்கலாம்" என்று முகிலன்தான் சொன்னான். குறிப்பிட்ட ஒரு சில பிரபலமான ப்ளாக்குகளில் வேலையை தொடங்கினோம். அதில் செல்வனின் ப்ளாக்கும் ஒன்று. அவனுக்கு எங்களது கடுமையான எதிர்மறையான கருத்து கோபத்தினை வரவைத்தது. தொடக்கத்தில் எங்களுடைய சில பின்னூட்டங்களை அகற்றினான். எங்கள் ப்ளாக்கினை மேம்படுத்துவதைவிட அவனை எதிர்ப்பதிலேயே எங்கள் நாளாந்த கடமையானது.

இப்படித்தான் போன கிழமை பெரிய தாக்குதல் முயற்சியாக அவனது blogger அக்கௌன்டின் பாஸ்வோர்டினை கண்டுபிடிக்க முயன்றேன். ஒருநாள் முழுக்க எங்கெல்லாமோ கூகிள் செய்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை ஈமெயிலை பார்த்தபோதுதான் ஒரு புதிரான ஒரு ஈமெயில் இருந்தது. "நேற்று நீங்கள் ஒரு பாஸ்வோர்டினை தேடினீர்களே! எங்களுக்கு உதவினால் நாங்கள் உங்களுக்கு அதனை கண்டு பிடித்து தருவோம்" என்ற ரீதியில் ஒரு ஈமெயில் வந்திருந்தது. அவர்களது லிங்கை கிளிக் செய்த போது சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. பொதுவாக என்னை பற்றிய கேள்விகள்தான். எனக்கு பிடித்த நிறம்.. உணவு.. அப்படி பத்து பதினைந்து கேள்விகள் இருந்தன. பிறகு சில சம்பவங்கள் விவரிக்கப்பட்டு அச்சம்பவங்களில் நான் இருந்தால் எடுக்கபோகும் முடிவுகள் பற்றி கேட்கப்பட்டிருந்தன. எல்லாமே நான் இதுவரை கேள்விப்பட்டிராத மனம் சார்ந்த, வித்தியாசமான, உயிரை பாதுகாத்துகொள்வது சம்பந்தமான சம்பவங்கள். ஒருவாறாக கேள்விகள் முடிந்த பின்னர். செல்வனின் பாஸ்வோர்ட் என்று சொல்லி ஏதோ இருபத்தைந்து எழுத்துகளாலான பாஸ்வோர்ட் கிடைத்தது. மிக நீளமான பாஸ்வோர்ட் அதுதான் என்னால் எவ்வோளவோ முயன்றும் முன்பு முடியவில்லை போலும்.

நானும் முகிலனும் அந்த பாஸ்வோர்டின் மூலம் அவனது ப்ளாக்கில் நுழைந்து சேட்டைகள் புரிய ஆரம்பித்தோம். சில பழைய ப்ளாக்கின் சில முக்கியமான பகுதிகளை அகற்றினோம். படங்களை அழித்தோம். ஒரு சில முக்கிய போஸ்டுகளின் பின்னூட்டங்களை அழித்தோம். செல்வன் ஒரு சில சக பதிவர்களை எதிர்த்து பின்னூட்டங்கள் இடுவது போன்று மாயையை உருவாக்கினோம். சில முக்கிய பின்னூட்டமிடும் நபர்களை block செய்து செல்வன் மேலே கோபத்தினை ஏற்படச்செய்தோம். ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக அவனிடமிருந்து ஒரு புதிய பதிவுமில்லை. அப்படி இருக்கும்போதுதான் இன்று அதிகாலை அந்த பயங்கர கனவு.

இது நடந்து ஒரு சில நாட்கள் சும்மா இருந்தோம்.. எங்கள் கனவுகளும் சுமாராகவே இருந்தன. ஆகக்கூடுதல் அதிர்ச்சியான கனவாக என்னை அலுவலகத்தில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்கள். அது நிஜத்தில் நடந்தாலும் எந்த அதிர்ச்சியும் இருக்கப்போவதில்லை. நானும் முகிலனும் சினிமா போனோம். கிரிக்கெட் விளையாடினோம். செல்வன் பற்றி ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. முகிலன்தான் மறுபடியும் தொடங்கினான்

"மச்சான்! அவன் எப்படிடா எங்க ரெண்டு பேர் கனவிலையும் ஒரே இரவில் வந்தான்".

"தெரியலைடா மச்சான்.. ஆனா எங்களை எதோ ஒரு விஷயத்துக்கு பலிகடாவாக பயன்படுத்துவதாக எனக்கு தோன்றுகிறது. நான் அந்த பாஸ்வோர்டினை எடுப்பதற்காக அளித்த பதில்கள் என்னுடைய மனநிலையை பற்றி அறிய பயன்படுத்தபட்டிருக்கலாம். அதன்மூலமாக எங்கள் கனவுகளை கட்டுபடுத்தியிருக்கலாம்"

"அதை வைச்சு உன்னை பற்றி தெரிந்திருக்கலாம்.. என்னை பற்றி தெரிய அவனுகளுக்கு வாய்ப்பில்லையே. என் கனவிலும் வந்தானே" என்றான்.

"அது வந்து மச்சான். நீதான் என் பெஸ்ட் பிரன்ட் என்று குறிப்பிட்டேன். உன் குணவியல்புகள் பற்றிய இரண்டு மூன்று கேள்விகள் இருந்ததாக ஞாபகம் வருது மச்சி"

"டேய் மச்சான்.. என்னடா ரொம்ப சீரியஸ் ஆகிற.. இதை போய் வேற எவன்ட்டயும் சொல்லாதே.. பைத்தியகார ஆஸ்பத்திரியை சேர்த்து விட்டிடுவான்கள். இன்னிக்கு இரவு நான் அவன் அக்கௌன்ட்டுக்கு நுழைந்து அவன் போஸ்ட் மொத்தத்தையும் நாசம் பண்றேன். நான் கொடுக்கிற பின்னூட்டத்திலே ஒரு பயல் இவனுடைய ப்ளாக்கினை பார்க்க வர மாட்டான்"

"முகிலன் என்னடா! இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி டென்ஷன் ஆகிற.. இந்த விஷயத்தினை அப்படியே மறந்துடு. அந்த திருச்செல்வனின் ப்ளாக் பக்கமே போக வேண்டாம்.."

அவரவர் வீட்டுக்கு திரும்பினோம். போகும்போது முகிலன் சாதாரணமாகத்தான் இருந்தான். ஆனால் எனக்கு இப்போதே நெஞ்சு வலி சிறிதாக ஆரம்பித்தது. உண்மையிலேயே வலிக்குதா? இல்லை நான்தான் கற்பனை செய்கிறேனா? என்றுகூட கண்டுபிடிக்கமுடியவில்லை.

இரவு பத்து மணியானது.. இதயத்துடிப்பு அதிகரித்தது. உடல் குளிர்ந்தது. பாவிப்பயல் முகிலன். எதாவது செய்து விடுவானோ என்ற பதைபதைப்பு மனதை என்னவோ செய்தது. இரவில் அவன் போன் செய்து எதாவது சொல்வானோ என்ற பயத்திலேயே, என் போனை switch off செய்தேன். இப்படியே போனால் சும்மாவே மாரடைப்பு வந்து விடும் போலிருந்தது. தயாராக இருந்த தூக்க மாத்திரைகள் இரண்டை உள்ளே தள்ளினேன். எப்போது நித்திரையிலாழ்ந்தேன் என்று தெரியாது. திடீரென்று எழுந்தேன். அறை கொஞ்சம் மாறியிருந்தது. சே! அம்மா நேற்றுத்தான் மாற்றி அடுக்கி இருக்கிறாள். கனவுதானோ என்று பயந்து விட்டேன். இதென்ன அறை வழமைக்கு மாறாக ஒளிர்கிறது. ம்.. ம்.. கனவுதான் காண்கிறேன்.. ஆனால் கனவு இல்லை என்று என்னை நம்ப வைக்க ஏதோ ஒரு சக்தி முயற்சிக்கிறது. போன் ரிங்டோன் ஒலித்தது. நான் switch off செய்த போன் இப்போது ஒலிக்கிறது. நிச்சயம் கனவுதான்.. மனதிற்குள் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டேன். முகிலன்தான் call பண்ணுறான். எடுப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை. எடுத்து விட்டேன் "மச்சான் உன்ட ரூமுக்கு வெளியே இருக்கிறேன். திறடா கதவை.". எங்கள் வீட்டின் முன் கதவை யார் திறந்திருப்பார்களோ என்று யோசிக்காமல் திறந்தேன். இது கனவுதானே. யாரும் திறந்திருக்க மாட்டார்கள். அவனை என்னுடைய ரூமுக்கு எனது மனதே கூட்டி வந்திருக்கும்.

"ஹாய் மச்சான்!" என்று குறும்பான புன்னகையுடன் வாசலில் நின்றான். கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தான். வழமையை விட ஒல்லியாக இருப்பதாகப்பட்டது. நாய் சங்கிலி மாதிரி கழுத்தில் ஏதோ தொங்கியது.

"டேய் இதென்னடா கோலம்" என்று கத்தினேன். "இல்லடா மச்சான்! செல்வன் உன்னை பார்க்கணும் என்றான். அதான் கூட்டிவந்தேன். மச்சான் ஒண்ணு தெரியுமாடா! இவனும் எங்கட ப்ளாக் வாசிப்பனாம்.". அதிர்ந்து போனேன்.

செல்வன் உள்ளே வந்தான். போன முறை கனவில் பார்த்த மாதிரிதான் இருக்கிறான். கையில் கத்தி இருந்தது. கொஞ்ச ரத்ததுளிகளும் காய்ந்திருந்தன. "வணக்கம் துயில்பவன் சார்! பார்த்து நாளாச்சு. எப்படி சுகமா?" என்றான். பேச்சில் இருந்த புன்னகை முகத்தில் இல்லை. எவ்வாறு அந்த இரத்ததுளிகள் வந்தன என்று யோசித்தேன். அடக்கடவுளே! முகிலனின் கையிலிருந்து கொஞ்ச ரத்தம் வந்தது. அவன் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. "டேய் உன்ட கையில ரத்தம்டா"

"என்ன துயில்பவன்! இதுக்கு போய் பயந்தா எப்படி.. முகிலன் நீ சேட்டை கழற்றி காட்டுடா மச்சான்" என்றான் செல்வன்.

உத்தரவு பெற்ற ரோபோ போல் அவன் மேல் சேட்டையை கழற்ற, உடல் முழுவதும் ஏதோ எழுதப்படிருந்தது. அதுவும் கத்தியால் கீறி எழுதி இருக்கிறான். "அடப்பாவி அவன் உடம்பு முழுக்க ரத்தம்டா" என்று கத்தினேன்.

"என்னோட ப்ளாக்கை நீங்கள் கைப்பற்றியதால், வேறு வழியில்லாமல் இவன் உடம்பில் எழுத வேண்டியதாயிற்று" செல்வன் குரூரமாக புன்னகைத்தான்.

முகிலன் அசைவற்று நின்று கொண்டிருந்தான். செல்வன் அவன் நெஞ்சில் அழுத்தமாக கீறி உள்ளிருக்கும் ஏதோ ஒரு உறுப்பை வெளியே எடுத்தான். "இதயம் துடிக்கிறத்தை நேர்ல பாரு" என்று என் மேல் அதனை வீசினான். என் இதயத்திலே கடுமையான வலி. அசைய முடியவில்லை.

நான் என்னுடைய போனை தேடினேன். போலீசுக்கு என்ன நம்பரோ! ஆம்புலன்சுக்கு போன் பண்ண வேண்டும். உடலேல்லாம் வியர்க்கிறது. கை நோவேடுக்கிறது. நிச்சயம் மாரடைப்புத்தான்.

"என்ன துயில்பவன்! உங்களுக்கு ஒரு சாய்ஸ் தாரேன். துப்பாக்கியா! கத்தியா! இல்லை பதிமூன்றாம் மாடியிலுள்ள உங்கள் வீட்டிலிருந்து குதிக்க போறீங்களா" நாராசமாக சிரித்துக்கொண்டு என்னை நெருங்கினான்.

"இல்லை.. இல்லை.. என்னை கொல்லாதே" என்று கத்தினேன். என்னுடைய வீடு இருப்பது நாலாம் மாடியில், இவன் பதிமூன்றாம் மாடி என்கிறான். என்னை பயமுறுத்த சொல்கிறானோ! நான் வெளியே குதித்தாலும் கால்தான் உடையும் தப்பி விடலாம். இல்லை.. இல்லை.. இது கனவு. அதனால்தான் நானே வீடு இருக்கும் மாடி பற்றிய குழப்பம் வருது. கனவில் என்னை சாகடிக்க இவனால் முடியாது.

"செல்வன்! நீ என்ன வேணும்னாலும் செய்.. இது கனவு.. கனவில் என்னை கொல்ல உன்னால் முடியாது"

அதைகேட்டு அவன் அதிர்ந்து போனான். இம்முறை அவன் பின்வாங்கினான். இம்முறை அவன் முகத்தில் வியப்பு இருந்தது. இது நிச்சயம் கனவுதான். எனது நம்பிக்கை என்னை காப்பாற்றி விட்டது. அவன் துப்பாக்கி இப்போது என் கையில் வந்து விட்டது. என் கனவை நான் விரும்பியவாறு மாற்றியமைக்க முடிகிறது.

"என்னை சுட்டு விடாதே! இது ஒரு கனவுதான்.. முகிலனை நான் கொல்லவில்லை. அவனுக்கு பலவீனமான இதயம்" காலில் விழுந்தான். இது கனவுதானே, உன்னை சுட்டாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. டிட்.. டிட்.. சைலேன்சர் துப்பாக்கி போலும்.. அவன் தலையிலிருந்து இரத்தம் வழிந்தது. கீழே விழுந்தான்.

இப்போது எழுந்து விட்டேன். இது நிஜம்தான் என்னுடைய அறை. அதே இடத்தில் எல்லா பொருட்களும் இருக்குது. ஆனால்.. ஆனால்.. கடவுளே கனவில் யாரையோ கொன்று விட்டேன். உடலெல்லாம் வியர்த்திருந்தது. நெஞ்சு வலி குறைந்திருந்தது. மணி காலை ஏழு மணியாகியிருந்தது. அவசர.. அவசரமாக போனை ஓன் செய்து முகிலனுக்கு போன் செய்தேன். முகிலன் நீ உயிருடன் இருக்கிறாயா? கடவுளே இது நிஜமாகவே கனவாக இருக்க வேண்டும். அவன் செத்திருக்கக்கூடாது.. "மச்சான் டேய்.. போனை எடுடா.. என்னால் தாங்க முடியாது".. கத்திகொண்டே தொடர்ச்சியாக முயற்சித்தேன். எத்தனை முறை போன் செய்தேனோ தெரியாது. போனை யாருமே எடுக்கவில்லை. அவனது வீட்டு போனுக்கு போன் செய்தால் உண்மை தெரியும். இல்லை வேண்டாம்.. எந்தவித பிரயோசனமும் இல்லை.. அவனுக்கு பலவீனமான இதயம்.

1999ம் வருடம் லயன் காமிக்ஸில் "கனவே கொல்லாதே" என்ற தலைப்பில் Dick Tracyயின் கதை வந்தது. அதிலுள்ள ஐடியாவை சுட்டு இந்த கதையை எழுதியுள்ளேன்.

2 comments:

  1. bloggers ஐ இணைத்து தமிழில் ஒரு superstitious thriller ஆ? தலைவரே கொஞ்சம் எடிட் பண்ணலாமோ? Thriller இல் சொல்லும் விஷயங்களை விட சொல்லாமல் விடும் விஷயங்கள் முக்கியம் ... சிறுகதைப்போட்டி try பண்ணுங்களேன் ... நானும் தனி ஆளா டி ஆத்த போர் அடிக்குது!!

    ReplyDelete
  2. ஹாய் அண்ணா,
    கருத்துக்கு நன்றி.. எடிட் செய்தால் கொஞ்சம் நல்லா வரும் என்று கடைசியில் நானும் யோசித்தேன். எதை வெட்டுவது என்று குழப்பம் வந்தது. சோம்பேறித்தனத்தால் விட்டுவிட்டேன் :).. இரவு மீண்டும் வாசித்து எடிட் செய்ய வேண்டும்..

    சிறுகதைபோட்டிக்கு நல்ல ஐடியா யோசித்து எழுத வேண்டும்.. அந்த வரைமுறைகள் பெரிய சவால்.. நல்ல ஐடியாஸ் கிடைத்தால் நிச்சயம் எழுதுவேன்

    ReplyDelete